மொழிபெயர்

திருவள்ளுவர்

வள்ளுவர் சிறப்புப் பெயரால் திருவள்ளுவர் (Thiruvalluvar) என அழைக்கப்படும் தமிழ்ப் புலவரும் மெய்யியலாளரும் ஆவார். நன்னெறி, அரசியல், பொருளாதார விடயங்கள், காதல் ஆகிய செய்யுள்களைக் கொண்ட திருக்குறள் இயற்றியதால் சிறப்பாக அறியப்படுகிறார். திருக்குறள் தமிழ் இலக்கியத்தியத்திலுள்ள சிறப்பான நூல்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

Thiruvalluvar

பிறப்பு சுமார் கி.மு. 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு
இடம் மதுரை அல்லது மயிலாப்பூர், சென்னை
காலம் பண்டைய மெய்யியல்
பகுதி கிழக்கத்திய மெய்யியல்
முக்கிய ஆர்வங்கள் நன்னெறி, அகிம்சை, நீதி, நல்லொழுக்கம், அரசியல், கல்வி, குடும்பம், படைத்துறை, நட்பு, அன்பு
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் பொது நெறி, ஒழுக்கம்
செல்வாக்குச் செலுத்தியோர் வேதம், சாணக்கியர், சங்க இலக்கியம்
செல்வாக்குக்கு உட்பட்டோர் ஏறத்தாழ எல்லா இந்திய, குறிப்பாக தென்னிந்தியா மெய்யியல்


திருவள்ளுவர் பற்றிய குடும்ப பின்னனி, சமய தொடர்பு, பிறப்பிடம் ஆகிய சிறு தகவல்கள் புராண அல்லது பண்டைய கதைகளில் மூலம் கிடைக்கின்றது. அவர் தற்போதுள்ள தமிழ்நாட்டில் வாழ்ந்தார் எனவும், சுமார் கி.மு. 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 7 ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தார் எனவும் பாரம்பரிய விபரங்களிலிருந்தும் அவருடைய எழுத்துகளின் மொழி ஆய்வுகளில் இருந்தும் அறியப்படுகின்றது.

பின்புலம்


திருவள்ளுவரின் வாழ்க்கை பற்றி முக்கியத்துமற்ற, ஆனால் நம்பகமான தகவல்கள் உள்ளன. அவருடைய பெயரோ அல்லது நூலின் மூல தலைப்போ மறுப்புக்கிடமின்றி உறுதி செய்யப்படவில்லை. திருக்குறள் நூலாசிரியரின் பெயர் பற்றிக் குறிப்பிடவில்லை. திருவள்ளுவர் என்ற பெயர் முதலில் 10 ஆம் நூற்றாண்டு திருவள்ளுவமாலையில் குறிப்பிடப்பட்டது.
  • ஒரு பாரம்பரியம் அவர் ஒரு பறையர் நெசவாளர் என்கின்றது.
  • இன்னொரு கருத்து அவர் ஒரு விவசாயம் செய்யும் வேளாளர் சாதியைச் சேர்ந்தவர் என்றும், ஏனென்றால் அவர் விவசாயம் பற்றிப் புகழ்ந்துள்ளார் எனவும் குறிப்பிடுகின்றது.
  • மு. இராகவையங்கார் ஊகிப்பின்படி பெயரிலுள்ள "வள்ளுவ" என்பது "வல்லபா" (கடற்படை அதிகாரியின் பதவி) எனும் பெயரின் வேறுபாடு ஆகும்.
  • ச. வையாபுரிப்பிள்ளை "வள்ளுவன்" (அரச மேளம் வாசிக்கும் பறையர் சாதி) என்ற பெயரில் இருந்து பெறப்பட்டதாகவும், படையினரின் எக்காள தலைவருக்கு ஒப்பான பறைசாற்றுபவர்களுக்கு தலைவர் எனவும் கருதுகிறார்.

கபிலர் எழுதிய “கபிலர் அகவல்” என்ற செய்யுள் அதன் ஆசிரியர் வள்ளுவரின் ஒரு சகோதரர் என்கிறது. இது மேலும் குறிப்பிடுகையில், அவர்கள் “அடி” என்ற பெயருடைய புலயா குலப் பெண்ணினதும், பகவான் என்ற பெயருடைய ஒரு பிராமணரின் பிள்ளைகள் எனவும் குறிப்பிடுகின்றது. இச் செய்யுள் அவர்களுக்க ஏழு பிள்ளைகள் இருந்தார்கள் எனவும், மூன்று பேர் ஆண்கள் (திருவள்ளுவர், கபிலர், அடிக்கமன்) எனவும், நான்கு பெண்கள் (அவை, உப்பை, உரவை, வெள்ளி) எனவும் குறிப்பிடுகின்றது. ஆயினும், இவ் புராண தகவல் ஐயத்துக்கிடமானது. கபிலர் அகவல் மொழியின்படி, இது கி.பி 15 ஆம் நூற்றாண்டுக்குரியது என கமில் சுவெலபில் குறிப்பிடுகின்றார்.

பல நூல் தொகுப்புக்கள் திருவள்ளுவரின் மனைவி பெயர் “வாசுகி” என்கின்றன. ஆயினும், அது வரலாற்று நோக்கில் ஐயத்துக்குரியது.

ஜி. யு. போப் திருவள்ளுவரை "தென்னிந்தியாவின் பெரும் புலவர்" என்கிறார், ஆனால் கமில் சுவெலபில், அவரை ஒரு புலவராகப் பார்க்கவில்லை. சுவெலபில் நோக்கின்படி, நூலாசிரியர் மிகவும் திறமையாக யாப்பியலை கையாண்டுள்ளார் எனவும், திருக்குறள் “உண்மை மற்றும் பெரும் கவிதை” அமைப்பை குறைவாக வெளிப்படுத்தி, சில இடங்களில் மட்டும் குறிப்பாக மூன்றாவது பகுதியில் (காமத்துப்பால்) கொண்டுள்ளது என்கிறார். இது திருவள்ளுவரின் பிரதான நோக்கம் கலையை உற்பத்தி செய்வதல்ல, ஞானம், நீதி, நன்னெறி ஆகியவற்றை அறிவிப்பதை நோக்கமாகக் கொண்டது.

காலம்

திருக்குறள் கி.மு. 300 முதல் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு வரைக்குட்பட்டதென்று பாரம்பரிய தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்றாம் சங்கத்தின் இறுதியில் எழுதப்பட்டதென்று கருதப்படுகின்றது. சோமசுந்தர பாரதியார், எம். இராசமாணிக்கம் போன்ற அறிஞர்கள் கி.மு 300 இற்கு முந்தியது என்ற பாரம்பரிய கருத்தினை ஏற்கின்றனர். வரலாற்றாசிரியர் கே. கே. பிள்ளை இது கி.பி. முதலாம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்குரியது என நம்புகிறார்.

பன்மொழியறிஞர் கமில் சுவெலபில் திருக்குறள் சங்க காலத்திற்குரியதல்ல எனவும், கி.பி 450 இற்கும் 500 இற்கும் இடைப்பட்டதென்று நம்புகின்றார். அவர் கணிப்பீடு மொழி மூலத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஆரம்ப அமைப்பு மறைந்துள்ளது எனவும், சமஸ்கிருதத்திலிருந்து சிலவற்றைக் கடன் வாங்கியுள்ளது எனவும் கணிக்கிறார். சுவெலபில் அதிலுள்ள சில இலக்கண மாற்றங்கள் பண்டைய சங்க இலக்கியம் இல்லை என்று குறிப்பிடுகின்றார். பண்டைய நூல்களுடன் ஒப்பிடும்போது, இது அதிகளவு சமஸ்கிருத கடன்சொற்களைக் கொண்டுள்ளது. சுவெலபில் கருத்தின்படி, பண்டைய தமிழ் இலக்கிய பாரம்பரியத்தைக் கொண்டிருந்தாலும், ஆசிரியர் "ஒரு பெரிய இந்திய நன்னெறி, அறவழி பாரம்பரியத்தின்" ஒரு பகுதியாக இருந்தார் எனவும், தர்ம சாத்திரங்கள், சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் போன்ற சமஸ்கிருத செய்யள்களின் மொழிபெயர்ப்பாக சில செய்யுள்கள் அமைந்துள்ளதாகக் குறிப்பிடுகின்றார்

ச. வையாபுரிப்பிள்ளை சுமார் கி.பி. 650 காலப்பகுதியில எழுதப்பட்டதென்றும், 6 ஆம் நூற்றாண்டு சில சமஸ்கிருத நூல்களில் இருந்து கடன் வாங்கப்பட்டிருக்கலாம் என்றும் நம்புகிறார். இதனை மறுக்கும் சுவெலபில், வையாபுரிப்பிள்ளை கடன் வாங்கப்பட்டிருக்கலாம் நம்பும் சொற்கள் தாமசு பறோ, மரே எமெனோ ஆகியோரால் திராவிட மூலம் என உறுதி செய்யப்பட்ட சொற்கள் என்கிறார்.

பிறப்பிடம்

கபிலர் அகவல் செய்யுள் திருவள்ளுவர் பிறந்த இடம் மயிலபுரம் (சென்னையிலுள்ள மயிலாப்பூர்) என்கின்றது. இன்னொரு புறம், திருவள்ளுவமாலையின் 21 ஆம் செய்யுள் அவர் பிறந்தது மதுரை என்கிறன்றது.

2005 இல் கன்னியாகுமரி வரலாற்று, கலாச்சார ஆய்வு நிலையத்தின் 3 பேர் கொண்ட ஆய்வுக் குழு தற்போதுள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமமான திருனாயனார்க்குறிச்சியில் பிறந்தார் என்கிறது. கணி குலத் தலைவர் கன்னியாகுமரி மாவட்டத்தின் மலைமிக்க நிலப்பகுதியான “வள்ளுவ நாடு” பிரதேசத்தை அரசர் வள்ளுவர் ஆட்சி செய்தார் என்ற கூற்றின்படி அவர்கள் கருத்து அமைந்தது.

சமயம்

கிட்டத்தட்ட இந்தியாவிலுள்ள எல்லா சமயக் குழுக்களும் திருவள்ளுவரை தங்கள் சமயம் எனக் குறிப்பிடுகின்றன.

ஜைனம்

கமில் சுவெலபில் திருக்குறளின் நன்னெறிகள் ஜைனம் ஒழுக்க விதிகளை பிரதிபலிப்பதாக நம்புகின்றார். (எ.கா. திருக்குறள் 251-260 சைவ உணவு முறையையும், திருக்குறள் 321-333 கொல்லுதல் பற்றியும் குறிப்பிடுகின்றது). சுவெலபில் “சில தூய ஜைனம் நுட்ப குறிப்புக்கள் கடவுள் பற்றி அடைமொழிகளை பின்வருமாறு கொண்டுள்ளது என்கிறார்:
  • மலர்மிசை ஏகினான் (திருக்குறள் 3), "மலரின்மேல் (தாமரை) சென்று வீற்றிருப்பவனது."
  • அறவாழி அந்தணன் (திருக்குறள் 8), "அறக்கடலான அந்தணன்"
  • எண்குணத்தான் (திருக்குறள் 9), "எண் வகைக் குணங்கள்"
  • ஆதி பகவன் (திருக்குறள் 1), "ஆதிபகவன்"

சுவெலபில் திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதிய 13 ஆம் நூற்றாண்டு இந்து அறிஞரான பரிமேலழகர் குறித்த கடவுள் அடைமொழிகள் ஜைன அருகதருக்கு மாத்திரம் பொருத்தமானது என ஏற்றுக்கொண்டார் என்கிறார். மேலும் சில அடைமொழிகள் பலமான ஜைனப் பண்பை பிரதிபலிப்பதாகக் குறிப்பிடுகின்றார்.
  • வேண்டுதல் வேண்டாமை இலானடி (திருக்குறள் 4), "விருப்பும் வெறுப்பும் இல்லாதவனாகிய இறைவனின் திருவடி"
  • பொறிவாயில் ஐந்தவித்தான் (திருக்குறள் 6), "ஐம்பொறி வழியாக எழுகின்ற ஆசைகளை அவித்தவன்"

திருவள்ளுவர் ஜைனத்தின் புது வளர்ச்சியை அறிந்தவர் என சுவெலபில் குறிப்பிடுகின்றார்.

இந்து சமயம்

பலதரப்பட்ட இந்து சமயப் பிரிவுகளும் திருவள்ளவரை தங்களுக்குரியவராகக் கொள்கின்றன. அவருடைய செய்யுள்களை தங்கள் படிப்பினைகளுடன் இணைக்க முயற்சித்தனர். சைவ சமயம் திருவள்ளுவரை சிவ பக்தனுக்குரிய பண்புகள் கொண்டவராகக் குறிப்பிட்டு, அவருடைய உருவத்தை தங்கள் கோயில்களில் அமைத்துக் கொண்டனர்.

பௌத்தம்

பௌத்த மதத்திற்கு மாறிய, சாதி எதிர்ப்பு செயற்பாட்டளரான அயோத்தி தாசர் திருவள்ளுவர் "திருவள்ளுவ நாயனார்" எனவும், ஒரு பௌத்தர் எனவும் குறிப்பிடுகின்றார். தாசர் “திருக்குறள்” என்பது பௌத்த திரிபிடகம் நூலுக்கு உசாத்துணை எனவும் குறிப்பிடுகின்றார். மேலும், இது ஆரம்பத்தில் திரிகுறள் (மூன்று குறள்) என அழைக்கப்பட்டதென்கிறார். ஏனென்றால், தம்மபிடகம், சுத்தபிடகம், விநயபிடகம் ஆகிய பௌத்த நூல்களுடன் தொடர்பு கொண்டதென்கிறார்.

கிறிஸ்தவம்

கிறிஸ்தவ நற்செய்தியாளரான ஜி. யு. போப் திருக்குறளில் கிறிஸ்தவ தாக்கம் உள்ளதென்கிறார். இதனை சுவெலபில் மறுக்கிறார். 1960 கள் முதல், சில தென்னிந்திய கிறிஸ்தவர்கள், குறிப்பாக சென்னை கிறித்துவக் கல்லூரியில் எம். தெய்வநாயகம், திருவள்ளுவர் தோமாவின் சீடருக்கான பண்புகளைக் கொண்டவர் என்றார். ஆயினும், சில தமிழ், கிறிஸ்தவ, இந்து அறிஞர்கள் அதனை பிழையானது என மறுக்கின்றனர்.

இலக்கியம்

திருக்குறள் தமிழ் மொழியின் பண்டைய இலக்கியத்தில் மிகவும் மதிப்புக்குரிய ஒன்றாகும். இது 10 செய்யுட்கள் கொண்ட 133 அதிகாரங்களுடன் 1330 செய்யுட்களைக் கொண்டுள்ளது. முதல் 38 பகுதிகள் அகம் பற்றியும், அடுத்த 70 பகுதிகள் பொருள் (புறம்) பற்றியும், மிகுதிப் பகுதிகள் இன்பம் (காதல்) பற்றியும் குறிப்பிடுகின்றது. இதன் பகுதிகள் சில மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது.

மேலும், திருவள்ளுவர் இரு மருத்துவம் பற்றிய தமிழ் நூல்களின் ஆசிரியர் என நம்பப்படுகின்றார். ஞான வெட்டியான், பஞ்ச ரத்னம் ஆகிய நூல்கள் இவரால் எழுதப்பட்டதென்று நம்பப்பட்டாலும், அறிஞர்கள் இவரின் பெயரால் பின்பு வேறு ஆசிரியரினால் எழுதப்பட்டதென்கிறார்கள். அத்துடன் இவை 16 ஆம், 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டன.

சிறப்பு

திருவள்ளுவருக்கு சில சிறப்புப் பெயர்கள் உள்ளன. அவையாவன: தேவர், நாயனார், தெய்வப்புலவர், செந்நாப்போதர், பெருநாவலர், பொய்யில் புலவர், பொய்யாமொழிப் புலவர், மாதானுபங்கி, முதற்பாவலர் ஆகியனவாகும்.

நினைவுச் சின்னங்கள்

1976 இல் சென்னையில் அமைக்கப்பட்ட, கோயில் போன்ற நினைவுச் சின்னம் வள்ளுவர் கோட்டம் ஆகும். இந்த நினைவுச் சின்ன தொகுதி திராவிடக் கட்டிடக் கலைக்கேற்ப அமைக்கப்பட்டுள்ளது. இங்கு முன்று கருங்கல் பாறைகளில் செதுக்கிய தேர், நீர்த் தடாகம் ஆகியன உள்ளன. இத்துடன் அமைந்துள்ள கேட்போர் கூடம் 4000 பேர் அமரக்கூடியதும், ஆசியாவில் உள்ள பெரிய கேட்போர் கூட நினைவங்களில் ஒன்றுமாகும். இங்குள்ள குறள் மண்டபத்தில் திருக்குறளின் 1330 குறள்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை அரபிக்கடல், வங்காள விரிகுடா, இந்து சமுத்திரம் என்பன சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ளது. 133 அடி உயரம் திருக்குறளின் 133 அதிகாரங்களையும், திருவள்ளுவர் சிலை காட்டும் மூன்று விரல்கள் அறம், பொருள், இன்பம் ஆகிய பால்களைக் காட்டுவதாகவும் உள்ளன.

இந்தியாவில் தன் சொந்த இடத்தைவிட்டு, அயல் மாநிலம் ஒன்றில், உள்ளூர் மொழிப் புலவர் ஒருவருக்காக உருவாக்கப்பட்ட சிலையாக, 9 ஆகஸ்ட் 2009 இல் பெங்களூருக்கு அருகில் உள்சூர் எனும் இடத்தில் முதலாவதாக திருவள்ளுவர் சிலை ஒன்று திறந்துவைக்கப்பட்டது.

2 கருத்துகள்:

  1. திருவள்ளுவர் எடுப்பார் கைப்பிள்ளை போலும். அனைவரும் சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு