சோழர் கொடி என்பது தமிழ் சோழ அரச வம்சத்தால் பயன்படுத்தப்பட்டது. இது புலிக்கொடி எனவும் அறியப்பட்டது. புலி அல்லது பாயும் புலியானது சோழர்களின் அரச சின்னம் என்ற சிறப்புடன் காணப்பட்டதுடன் நாணயங்கள், அரச முத்திரைகள் மற்றும் பதாகைகளில் சித்தரிக்கப்பட்டது. உத்தம சோழனின் நாணயங்களில், பாண்டியரின் இரட்டை மீனுக்கும் சேரரின் வில்லுக்கும் இடையில் புலி அமர்ந்திருப்பதாக அமைக்கப்பட்டிருந்தது. 12 ஆம் நூற்றாண்டில் சேக்கிழரால் தொகுக்கப்பட்ட பெரிய புராணத்தில் சோழரின் கொடி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரிய புராணம் பின்வருமாறு சோழர் கொடி பற்றிக் குறிப்பிடுகிறது:
பாட்டியற் றமிழுரை பயின்ற வெல்லையுட்
கோட்டுயர் பனிவரைக் குன்றி னுச்சியிற்
சூட்டிய வளர்புலிச் சோழர் காவிரி
நாட்டியல் பதனையா னவில லுற்றனன்.
சோழர் கொடி புலிச் சின்னம் பொறித்த கொடியாக இருந்தது என வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றபோதும், இது இப்படித்தான் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. ஆகவே, தற்காலத்தில் சோழர் கொடியும் கற்பனையின் அடிப்படையில் புலியை மையமாகக் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடியும் தமிழீழக் கொடியும் சோழர் கொடியின் அடிப்படையில் புலியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால், இது முழு புலி உருவம் அற்று கர்ச்சிக்கும் புலித்தலையுடன் அமைந்துள்ளது.
புலிச் சின்னம் பொறித்த பிற கொடிகள் பிற சூழலிலும் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு அமைந்த சில கொடிகள் பின்வருமாறு:
- கூட்டாட்சி மலாய் அரசுகளின் கொடி – மலேசியா (1895–1946)
- மலேசியா கூட்டாட்சி நிலப்பரப்பு கொடி
- புத்ராஜாயா – மலேசியா
- பிறிமோர்சுக்கி நிலப்பரப்பு கொடி - உருசியா
- இர்கூத்ஸ்க் ஒப்லாஸ்து கொடி - உருசியா
- நாம் தமிழர் கட்சிக் கொடி
- சுதந்திர இந்திய படைப்பிரிவு (1941 – 1945)
- போமோசாக் குடியரவு - தாய்வான் (1895)
- கோட்டை இராச்சியம் (1412 – 1597)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக