மொழிபெயர்

தமிழ் மணி

தமிழ் மணி (Tamil Bell)  என்பது 1836 இல் மறைபரப்பு ஆய்வுப்பயணி வில்லியம் சேலேன்சோ என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட, உடைந்த வெண்கல மணியாகும். இதனை மாவோரி இனப் பெண்கள் உருளைக்கிழங்குகள் அவிக்கும் பாத்திரமாக நியூசிலாந்தின் நோர்த்லாந்து பிராந்தியத்திலுள்ள வங்காரை என்ற பகுதியில் பயன்படுத்தினர்.
Tamil Bell
தமிழ் மணி

இந்த மணி 13 செமீ நீளமும் 9 செமீ ஆழமும் உடையது. இதில் பொறிப்பு காணப்படுகின்றது. மணியைச் சுற்றிக் காணப்படுவது பண்டைய தமிழ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அப்பொறிப்பானது “முகையிதீன் பக்ஸ் கப்பலின் மணி” என்றுள்ளது. அந்த எழுத்துகள் தற்போதைய தமிழ் எழுத்து முறையிலிருந்து அதிகம் வித்தியாசப்படவில்லை. ஆகவே, மணியானது 500 ஆண்டுகள் பழமையானதாக, கடைசி பாண்டியர் காலத்துக்குரியதாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.



இந்தியவியலியலாளர் இராமச்சந்திர தீட்சிதர் தன்னுடை நூலான "The Origin and Spread of the Tamils" என்பதில் குறிப்பிடும்போது, பண்டை தமிழ் மாலுமிகள் ஆத்திரேலியா, பொலினீசியா பற்றிய அறிவைக் கொண்டிருந்தார்கள் என்கிறார். 14 ஆம் நூற்றாண்டில் தமிழ் கப்பலோடிகள் வடக்கு ஆத்திரேலியா சென்றடைந்தனர். மணி பற்றி கண்டுபிடிப்பு நியூசிலாந்தில் தமிழர் வாழ்ந்தனர் என்ற ஊகத்தை உருவாக்கினாலும், அது போதுமானதாக இல்லை. வன்னிக்கும் தென் கிழக்காசியாவிற்கும் இடையிலான வர்த்தகத் தொடர்பு அதிகரித்திருந்த வேளையில் திருகோணமலையிலிருந்து மாலுமிகள் நியூசிலாந்து சென்றிருக்கலாம். இந்தியர்களுடன் தொடர்பினைப் பேணிய போர்த்துக்கேய கப்பலோட்டிகளினால் இந்த மணி கரையில் போடப்பட்டிருக்கலாம். அக்காலத்தில் பல இந்திய கடற்கலங்கள் ஐரோப்பியர்களினால் கைப்பற்றப்பட்டிருந்தன. அவ்வாறான கப்பல்களின் உடைந்த எச்சங்களில் இருந்து இம்மணி நியூசிலாந்து கரைக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம்.

இந்த மணியை தற்போது நியூசிலாந்து டே பாபா டொங்கரேவா கண்காட்சியகம் என்றழைக்கப்படும் நூதனசாலைக்கு வில்லியம் சேலேன்சோ அன்பளிப்புச் செய்தார். தற்போதும் அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

சீயக்காய் மரம்

சீயக்காய் மரம் (Sapindus) என்பது விழுதி குடும்பத்தைச் சேர்ந்த சிறிய மரமும் புதர் வகையுமான ஐந்து முதல் பனிரெண்டு இனங்களைக் கொண்ட பேரினத் தாவரமாகும். இவ்வினம் சூடான மிதவெப்பமண்டலம் முதல் வரண்ட பிரதேசம் வரையிலான இடங்களைத் தாயகமாகக் கொண்டது. இப்பேரினம் இலையுதிர் மற்றும் மாறா பசுமை இனங்களைக் கொண்டுள்ளது. இவ்வினப் பேரினங்கள் சிலவற்றின் பழத்தின் சதைப்பகுதி சவர்க்காரம் செய்யப் பயன்படுத்தப்படுவதால், அவற்றை soapberries அல்லது soapnuts என ஆங்கிலத்தில் அழைப்பர்.

சீயக்காய் மரம்

இதனை தமிழில் சிகைக்காய் அல்லது சீக்காய் எனவும் அழைப்பதுண்டு. சிகை என்றால் தலை முடி என்று பொருள். இதனை தலைக்குத் தேய்த்து குளிப்பதுண்டு. சிகைக்காய் என்பது மருவி சீயக்காய் அல்லது சீக்காய் என பயன்படுத்தப்படுகிறது.

இதன் ஆங்கிலப் பொதுப்பெயர் இலத்தீன் சொல்லான sapo என்பதில் இருந்து பெறப்பட்டது. இதன் பொருள் சவர்க்காரம் ("soap") என்பதாகும். மேலும் indicus என்பது இந்தியா என்பதற்கான பொருள் ஆகும்.



இதன் இலைகள் 15–40 செ.மீ (5.9–15.7 அங்குலம்) வரை நீளமாக வளரக்கூடியன. ஓலை 14-30 இலைகளைக் கொண்டு காணப்படும். இதன் மலர்கள் பெரிய பூங்கொத்தில் இருந்து உருவாகின்றன. இதன் சிறிய மலர்கள் பாலேடு வெண்மை நிறமுடையன. பழம் சிறியதும் தோல் போன்ற வெளி அமைப்புடன் உள்ளோட்டுச்சதையம் கொண்டு காணப்படும். இது 1–2 செ.மீ (0.39–0.79 அங்குலம்) குறுக்களவு கொண்டதும், மஞ்சள் நிறமானது பழுத்ததும் கருமையாக மாறிவிடும். இதனுள் ஒன்று முதல் மூன்று வித்துகள் வரை காணப்படலாம்.

பயன்பாடு

சீயக்காய் டஸா் பட்டிற்கான இயற்கைச் சாயத்தை உருவாக்கப் பயன்படுகின்றது. உள்ளோட்டுச் சதைக்கனி இயற்கை மேல் பரப்பி உள்ள சப்போனின் வேதிப்பொருளைக் கொண்டுள்ளது. இதனை பழங்காலத்தில் ஆசிய நாட்டவரும் செவ்விந்தியரும் கழுவுவதற்காகப் பயன்படுத்தினர்.

வரலாற்று ரீதியாக உள்நாட்டு மருத்துவத்தில் சீயக்காய் பயன்படுத்தப்பட்டது. ஆனாலும் அறிவியல் ஆய்வு ரீதியாக அதன் விளைவு பற்றி அறியப்படவுமில்லை உறுதிசெய்யப்படவுமில்லை.

கொரகொல்லை தேசிய வனம்

கொரகொல்லை தேசிய வனம் (Horagolla National Park) என்பது இலங்கையில் உள்ள பெரிய தேசிய பூங்காக்களில் ஒன்று ஆகும். சிங்களத்தில் எண்ணை வகை மரம் ஒன்று “கொர” என்று அழைக்கப்படும். அப்பகுதியில் அதிகமான “கொர” எனப்படும் எண்ணைத் தாவரங்கள் மிகுந்து இருப்பதால் அவ்விடம் கொரகொல்லை எனும் பெயர் பெற்றது. அதிக உயிரியற் பல்வகைமை காணப்பட்டதால், இது ஆரம்பத்தில் செப்டம்பர் 5, 1973 அன்று வனவிலங்குகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. பின்பு யூன் 24, 2004 அன்று கொரகொல்லை தேசிய வனமாக அறிவிக்கப்பட்டது. கொரகொல்லை மேல் மாகாணத்தில் உள்ள ஒரேயொரு நகரப் பூங்காவாகும். எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா குடும்பத்தினரின் சொந்த இடமான வலவூவைக்கு அருகில் கொரகொல்லை அமைந்துள்ளது. இப்பூங்காவானது கொழும்பிலிருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது கம்பகா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் ஆள்கூற்று 7°08′22″N 80°05′08″E ஆகும். 33 கெக்டயர் பரப்பில் அமைந்துள்ள இதனை வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் பராமரிக்கின்றது.

கொரகொல்லை தேசிய வனம்
கொரகொல்லை தேசிய வனம்

கொரகொல்லை ஒரு தாழ்நில மழைக்காடாகும். இப்பூங்கா உக்கல் மண் அமைப்பைக் கொண்டதும் வருடம் முழுவதும் சூடான காலநிலையுடன் காணப்படும். இப்பகுதியில் எண்ணை தாவரம், கூந்தற்பனை, நெதுன், காட்டு மா, அரச மரம், ஏழிலைப்பாலை, வகுளம், ஈரப்பலா போன்ற தாவரங்கள் மிகுதியாகவுள்ளன. மேலும் யானைக் கொழிஞ்சி மரங்களையும் இப்பகுதியில் காணலாம். காட்டுப்பகுதியில் தேக்கு, கொன்றை போன்ற மரங்களைக் காணலாம்.

மீன்பிடிப் பூனை, வெண் புள்ளிச் சருகுமான், செந்நரி, பழுப்பு மலை அணில் ஆகிய பாலூட்டிகள் இப்பகுதியில் காணப்படுகின்றன. கொரகொல்லை பறவைகளைப் பார்க்கும் இடமாகவும் கருதப்படுகின்றது. இங்கு 68 பறவை இனங்கள் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. குட்டைக்கிளி, கரு நெஞ்சு கொண்டைக்குருவி, குக்குறுவான், ஆசியக் குயில் போன்ற இங்கு பொதுவாகக் காணப்படும். இலங்கை பழுப்பு இருவாய்ச்சி, இலங்கை தொங்கும் கிளி, லயாட் குட்டைக்கிளி, சின்ன மீன்கொத்தி போன்ற பறவைகளும் காணப்படுகின்றன. அருகிய நறுக்கி பட்டாம்பூச்சி, இலங்கை அழகி, நீல மோர்மன் போன்ற பட்டாம்பூச்சிகள் இங்கு பொதுவாகக் காணப்படும். ஆமை இனங்கள் உட்பட்ட பல அச்சுறுத்தப்பட்ட உயிரினங்கள் இப்பூங்காவில் காணப்படுகின்றன.

குபேரக்கோலம்

குபேரக்கோலம் என்பது ஒரு குறிப்பிட்ட மாயச் சதுரம் ஆகும். இது தென்னிந்தியாவில் சில வீடுகளில் தரையில் அரிசி மாவு மூலம் போடப்படும் கோலம் ஆகும். இந்து பாரம்பரியத்தின்படி, குபேரன் செல்வம், செழிப்பு ஆகியவற்றின் கடவுளாகும். குபேரக்கோலம் போட்டு வழிபாடு செய்தால், அவர் செல்வம், வளம் ஆகியவற்றைப் பெறுவார் என நம்பப்படுகின்றது.


ஒரு கோலம் வலைவடிவ நகர அமைப்பில் புள்ளிகளைக் கொண்டு கோடுகளினாலும் வளைவுகளினாலும் வரையப்படும். தென் இந்தியாவில் பல இடங்களில் அரிசி மாவு / வெண்கட்டி பொடியுடன் நிறத்தூள் சேர்த்து கோலம் வரையப் பயன்படுத்தப்படுகின்றது

குபேரக்கோலம் மாயச் சதுரம் 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28 ஆகிய இலக்கங்களைக் கொண்டு பின்வருமாறு வரையப்படும்.

 27 20 25
22 24 26
23 28 21

இந்த மாயச் சதுரத்தில் ஒவ்வொரு வரிசையிலும் நிரலிலும் எண்கள் காணப்படும். இவற்றை எந்த ஒழுங்கில் கூட்டினாலும் விடை 72 வரும். முதலில் இக்கோலத்தில் வரிகளை வரையப்படும். பின்பு 24, 28, 23, 22, 27, 20, 25, 26, 21 என்ற ஒழுங்கில் எண்கள் எழுதப்படும். பொதுவாக ஒவ்வொரு கட்டத்திலும் நாணயமும் பூவும் இடப்படும்.

குழிநாவல்

குழிநாவல் மரம் என்பது பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த நாவல் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். இதன் தாவரவியல் பெயர் மிர்டஸ் கொமுனிஸ் (''Myrtus communis'') என்பதாகும். இது தென் ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மெற்கு ஆசியா, மக்ரோனேசியா, இந்திய துணைக்கண்டம் ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்டதும் அவ்விடங்களில் பயிரிடப்படும், மாறாப்பசுமை புதர்த் தாவரமாக உள்ளது.

குழிநாவல்
குழிநாவல்

சுக்கட் எனப்படும் யூதப் பண்டிகையின்போது பயன்படுத்தப்படும் நான்கு பழங்களில் இதுவும் ஒன்றாகும்.

குழிநாவல் ஒரு மாறா பசுமை புதராக அல்லது சிறு மரமாக 5 மீட்டர்கள் (16 அடி) உயரமாக வளர்கிறது. இதன் இலைகள் 2–5 செ.மீ (0.79–1.97 அங்குலம்) நீளமாக வளர்வதுடன், நறுமண ஆவி எண்ணையாகவும் காணப்படுகின்றது.

இதன் பூக்கள் வெள்ளையாக அல்லது மென்சிவப்பு மென்மையான பூசப்பட்டு, ஐந்து இதழ்களுடனும், பூவைவிட்டு நீட்டிக் கொண்டிருக்கும் பல மகரந்தக் கேசரத்துடன் காணப்படும். பழங்கள் சதைப்பற்றுள்ளக் கனியாக,  பழுத்ததும் நீல-கருப்பு நிறத்தில் காணப்படும்.

இதன் இனங்கள் நெருக்கமான பல துணையினங்களைக் கொண்டுள்ளது. இது அரச தோட்டக்கலை சமூகத்தினால் இத்தாவரத்தின் தோட்டம்சார் சிறப்பிற்கான தோட்டச் சிறப்புப் பரிசை வென்றது.

திணை தாவரம்
பிரிவு பூக்கும் தாவரம்
பிரிவு Eudicots
பிரிவு Rosids
வரிசை Myrtales
குடும்பம் Myrtaceae
பேரினம் நாவல்
இனம் M. communis

சஞ்சீவினி

சஞ்சீவினி என்பது பாறையில் வளரக்கூடிய ஒரு தாவரமாகும். இது சஞ்ஜீவினி எனவும் சஞ்ஜீவனி எனவும் சஞ்சீவனி எனவும் பலவிதமாக உச்சரிக்கப்படும். இந்தியாவை தாயகமாகக் கொண்ட இதன் உயிரியற்பெயர் செலகினெல்ல பிரயோப்டெரிஸ் (Selaginella bryopteris) என்பதாகும். இந்தியாவில் இதனை மருத்துவ தேவைகளுக்காப் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் இதனை புராண சஞ்சீவினி மூலிகைகளில் ஒன்றாகவும் கருதுகின்றனர்.

சஞ்சீவினி
சஞ்சீவினி

சஞ்ஜீவனி என்ற பிரபல்யமான பெயர் "உயிரை அளிக்கும் ஒன்று" என்ற பொருள் கொண்டது. இது இராமாயணத்தில் குறிப்பிடப்படும் தாவரத்தின் பெயரில் இருந்து பெறப்பட்டது. வேறு மருத்துவத் தாவரங்களும் இப்பெயரால் அழைக்கப்படுவதுண்டு. இராமாயணம் குறிப்பிடும் தாவரத்தை தாவரவியல் ரீதியாக அடையாளப்படுத்துவது தெளிவற்றது. ஆனாலும், செலகினெல்ல பிரயோப்டெரிஸ் (Selaginella bryopteris) என்ற தாவரவியற் பெயருடைய இத்தாவரம் சஞ்சீவினி / சஞ்ஜீவனி என பிரேரிக்கபபட்டுள்ளது.




சஞ்சீவினி வெப்ப வலய குன்றுகளில் வளர்கிறது. குறிப்பாக இந்தியாவின் ஆரவல்லி மலைத்தொடர் பகுதியில் இது வளர்கிறது. சிறுநீர் அடைப்பு, வெப்ப வாதம், ஒழுங்கற்ற மாதவிடாய், மஞ்சள் காமாலை போன்றவற்றிற்கு பாரம்பரிய நிவாரணியாக பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும், அறிவியல் ரீதியாக இதன் விளைவு கண்டறியப்படவில்லை. மேலும் இது கோமா என்ற மயக்கநிலை நோயாளிக்கு மூச்சு இழுத்தலுக்கு உதவுகின்றது.

உயிரியல் வகைப்பாடு

திணை:

தாவரம்

பிரிவு:

Lycopodiophyta

வகுப்பு:

Isoetopsida

வரிசை:

Selaginellales

குடும்பம்:

Selaginellaceae

பேரினம்:

Selaginella

இனம்:

S. bryopteris
இருசொற் பெயரீடு
Selaginella bryopteris
(கரோலஸ் லின்னேயஸ்) பேக்கர், 1884

காஞ்சிப்பட்டு

காஞ்சிப்பட்டு (Kanchipuram Silk) என்பது தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்படும் பட்டுச் சேலை ஆகும். இது ஒரு புவியியல் சார்ந்த குறியீடாக இந்தியா அரசால் 2005-06 ஆம் ஆண்டில் அறிவிக்கபட்டது. 2008 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி, ஏறத்தாழ 5,000 குடும்பங்கள் இப்புடவைத் தொழிலில் ஈடுபட்டன. அங்கு 25 பட்டு, பருத்தி தொழிற்சாலைகளும் 60 வண்ணச்சாயம் பூசும் பிரிவுகளும் உள்ளன.

காஞ்சிப்பட்டு
காஞ்சிப்பட்டு

இச்சேலைகள் தூய பட்டு நூற்களினால் நெய்யப்படுகின்றன. காஞ்சிப்பட்டு நெய்தலுக்கான தூய பட்டு தென்னிந்தியாவில் இருந்தும் குஜராத்தில் இருந்தும் கிடைக்கின்றன. காஞ்சிப்பட்டு நெய்தலுக்காக மூன்று நெசவுத் தறி நாடாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. நெசவாளர் வலமாக வேலை செய்கையில், உதவியாளர் இடப்புற நெசவுத் தறி நாடாவில் வேலை செய்வார். கரை நிறமும் வடிவமும் பொதுவாக பிரதான பகுதியில் இருந்து வேறுபட்டுக் காணப்படும். சேலையில் தொங்கும் குஞ்சம் வேறாக மென்சாயலில் நெய்யப்படும். இது முதலில் வேறாக நெய்யப்பட்ட பின்னரே நேர்த்தியாக பின்னர் சேலையில் சேர்க்கப்படும். குஞ்சம் சேர்க்கப்பபடும் சேலையின் பகுதி பொதுவாக வளைவான வடிவில் அமைக்கப்படும். கலப்படமற்ற காஞ்சிப்பட்டில் உடல் பகுதியும் கரைப்பகுதியும் வெவ்வேறாக நெய்யப்பட்டு ஒன்றோடென்று பிணைக்கப்படும். சேலை கிழிந்தாலும் பிரியாதவாறு இந்த இணைப்பு மிகவும் பலமானது. அத்துடன் கரைப்பகுதியும் பிரிந்துவிடாது. இதனைக் கொண்டே காஞ்சிப்பட்டை மற்றைய புடவைகளில் இருந்து வேறுபடுத்திக் காண முடியும்.




சேலை அவற்றின் அகலமான முற்றிலும் வேறுபட்ட கரைப்பகுதியினால் தனிச்சிறப்பு மிக்கவை. கோயில் கரை, சதுரங்கள், கோடுகள், பூக்கள் போன்றவை காஞ்சிப்பட்டில் பாரம்பரிய வடிவங்களாகும். காஞ்சிப்பட்டில் உள்ள உருமாதிரியும் வடிவமும் தென்னிந்தியக் கோயில்கள் அல்லது இலைகள், பறவைகள், மிருகங்கள் போன்ற இயற்கை தோற்றங்கள் கொண்ட உருவங்களாலும் எழுத்துக்களாலும் உயிர்ப்பூட்டப்பட்டுள்ளது.

மகாபாரதம், இராமாயணம் ஆகிய புராணக்கதைகளுக்காக ரவி வர்மா வரைந்த ஓவியங்களில் உயர்ந்த குஞ்சங்களுடன் உள்ள இச்சேலை காணப்படுகின்றது. காஞ்சிப்பட்டு சேலைகள் அவற்றின் கடுஞ்சிக்கலான வேலைப்பாடு, நிறம், வடிவம், பொன் நூல் போன்ற மூலப்பொருள் ஆகியவற்றால் மிகவும் விலைமதிப்புள்ளதாகக் காணப்படுகின்றது. மேலும், இச்சேலை அதனுடைய தரம், தனக்கென பெயர்பெற்ற வேலைப்பாடு ஆகியவற்றால் சிறப்புப் பெறுகின்றது.

காஞ்சிப்பட்டு புடவைகள் பளுவான பட்டினாலும் பொன் துணியினாலும் நெய்யப்படுவதால் சிறப்பானதாக கருதப்படுவதோடு, நிகழ்ச்சிகளிலும் விழாக்களிலும் அணியப்படுகிறது.

2008 இல் வெளியான காஞ்சிவரம் என்ற திரைப்படம் காஞ்சிப்பட்டு நெசவாளிகளின் போராட்டத்தைத் சித்தரித்து எடுக்கப்பட்டது.

பிரம்மக் கமலம்

பிரம்மக் கமலம் என்பது கள்ளி இனத் தாவரமும், அப்பேரினத்தில் அதிகம் பயிரிடப்படும் இனமுமாகும். பிரம்மக் கமலம் அரிதாக இரவில் மலர்ந்து வைகறைக்கு முன் வாடிவிடும். இதனால் இது இரவில் மலரும் கள்ளி எனவும், மேலைத்தேய பகுதியில் இரவின் அரசி / இரவின் இராணி (queen of the night) எனவும் அழைக்கப்படும். இதன் வெண் நிறப் பூக்கள் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் மலர்வதால் அபூர்வ மலர் வகையாக கருதப்படுகின்றது. இதன் தாவரவியல் பெயர் “எபிபைலும் ஒக்ஸிபெடாலம்” (Epiphyllum oxypetalum) ஆகும்.

பிரம்மக் கமலம்
பிரம்மக் கமலம்
இது ஆங்கிலத்தில் Orchid cactus (ஓக்கிட் கள்ளி), Jungle cactus (காட்டுக் கள்ளி), Night blooming cereus (இரவில் மலரும் கள்ளி), Dutchman's Pipe (இடச்சுக்காரனின் குழாய்) என்றெல்லாம் அழைக்கப்படும். பிரம்மக் கமலம் தென் மெக்சிக்கோவை தாயகமாகக் கொண்டு, தென் அமெரிக்கா வரை பரந்துள்ளது. இது பரவலாக பயிரிடப்படுவதுடன், வெப்ப வலயத்தில் பயிரிடப்படுவது குறைவாகவுள்ளது. சீனாவில் இயல்பாக வளர்வதுடன் இலங்கை, இந்தியா போன்ற இடங்களிலும் காணப்படுகின்றது. கோடைகாலத்தின் கடைசிப் பகுதியில் இது பூக்கிறது.



இந்தியாவில், உயிர்களை உருவாக்கும் இந்துக் கடவுளான பிம்மாவின் பெயரால் இம்மலர் அழைக்கப்படுகிறது. இம்மலர் மலர்கையில் வேண்டுதல் செய்தால், அவ்வேண்டுதல் கேட்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இது சிங்கள மொழியில் சுவர்க்கத்திலிருந்து வந்த மலர் என்ற பொருளில் இலங்கையில் அழைக்கப்படுகிறது. சீனாவில் அதிஷ்டம், எதிர்பாராத ஆதாயம், ஆழ்ந்த மனக்கிளர்ச்சி, குறுகிய மகிமை போன்ற பெயர்களினால் இம்மலர் அழைக்கப்படுகின்றது. ஜப்பானில் உயர்ந்த வரலாறு இம்மலருக்கு உண்டு. அங்கு இதற்கு “நிலாவின் கீழ் அழகு” என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. “மாபெரும் வெற்றியின் மலர்” என்ற பொருளில் இந்தோனேசியாவில் அழைக்கப்படுகின்றது.

தண்டு நிமிர்ந்து, படரும் தன்மையுடையதும் ஏராளமான கிளைகளைக் கொண்டும் காணப்படும். முதன்மையான தண்டு உருண்டையான 6 மீட்டர் நீளத்திற்கு வளரக்கூடியதும், பக்கவாட்டாய் தட்டையாகவும் அடிப்பாகம் மரம் போன்றும் தோற்றமளிக்கும். இணைத் தண்டுகள் தட்டையாக, முட்டை வடிவ நீண்டு கூரான, 30 செ.மீ x 10-12 செ.மீ அளவிற்கு வளரும். தண்டின் ஓரங்கள் உறுதியற்ற ஆழமான விளிம்பும் அலை போன்ற வடிவில் காணப்படும். பூக்கள் தட்டையான பகுதியில் உருவாகின்றன. இது 30 செ.மீ நீளமும் 17 செ.மீ அகலமும் கொண்டு காணப்படும். இது இரவில் மலர்வதுடன் மிகவும் நறுமணம் உடையது. நறுமணத்தின் முதன்மை ஆக்கக்கூறு பென்சீல் சலிசைக்கிளேட் என்ற வேதிப்பொருள் மூலம் கிடைக்கிறது. இதன் விதையுறை மூடப்பெறாத, சற்று கோணமானதாக, பச்சை நிறத்தில் காணப்படும்.

திணை தாவரம்
தரப்படுத்தப்படாத பூக்குந்தாவரம்
தரப்படுத்தப்படாத இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத Core eudicots
வரிசை Caryophyllales
குடும்பம் கள்ளி
பேரினம் எபிபைலும்
இனம் எ. ஒக்ஸிபெடாலம்
காப்பு நிலை தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்


உத்தியோகபூர்வமற்ற இலங்கையின் தேசிய சின்னங்கள்

இலங்கையின் உத்தியோகபூர்வ தேசிய சின்னங்களாக தேசிய கீதம், தேசியக் கொடி, தேசிய இலச்சினை, தேசிய தினம், தேசிய மொழி, தேசிய மலர், தேசிய மரம், தேசியப் பறவை, தேசிய வண்ணத்துப்பூச்சி, தேசிய இரத்தினக்கல், தேசிய விளையாட்டு என்பன காணப்படுகின்றன. ஆயினும் சில சின்னங்கள் உத்தியோகபூர்வமற்ற இலங்கையின் தேசிய சின்னங்களாகக் கருதப்படுகின்றன.

உத்தியோகபூர்வமற்ற இலங்கையின் தேசிய சின்னங்கள்

தேசிய விலங்கு
இலங்கையின் தேசிய விலங்கு / மிருகம் என்று எதுவும் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆயினும், இலங்கை யானை, சிங்கம், மர அணில் என்பன தேசிய விலங்குகளாகக் கருதப்படுகின்றன. சிங்கம் சிங்களவர் மத்தியில் மிகவும் முக்கியத்துவம் பெறும் ஒரு விலங்காகும். மேலும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கைச் சிங்கம் இருந்ததாக நம்பப்படுகின்றது.



தேசிய நினைவுச் சின்னம்
பிரித்தானியரிடமிருந்து இலங்கை விடுதலை பெற்றதனை நினைவுபடுத்தும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கட்டடமாக சுதந்திர சதுக்கம் காணப்படுகின்றது. இது கண்டி இராச்சியத்தின் அரச கேட்போர் கூடமான கொண்டாட்ட மண்டபத்தின் (மகுல் மடுவ) அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இது சுதந்திர நினைவு மண்டபம் எனவும் அழைக்கப்படுகின்றது.

தேசிய உடை
இலங்கையின் தேசிய உடையாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஏனென்றால் 3 பெரும்பான்மை இனக்குழுக்களும் சில சிறுபான்மை இனக்குழுக்களும் உள்ளனர். பொதுவான ஆண்களின் கலாச்சார உடையாக சாரனும் / வேட்டியும் மேற்சட்டையும், பெண்களின் கலாச்சார உடையாக புடவயும் காணப்படுகின்றன. சிங்கள, தமிழ், முஸ்லிம்களின் உடைகளின் குறிப்பிடத்தக்க சிறு வேறுபாடுகள் உள்ளன. ஆயினும் இன்று பொதுவாக பலர் மேலத்தேய ஆடைகளையே அணிகின்றனர்.

தேசிய உணவு
சோறும் கறியும் இலங்கையில் பிரபலமான உணவாகவுள்ளது. சமைக்கப்பட்ட சோற்றுடன் பல மரக்கறி / இறைச்சி போன்ற கறிவகைகளை சேர்த்து பரிமாறப்படுகின்றன.

இலங்கையின் தேசிய சின்னங்கள்

இலங்கையின் தேசிய சின்னங்கள் என்பவை இலங்கையையும் அந்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் இலங்கையர்களையும் அவர்களின் கலாச்சாரம், பண்பாடு, வரலாறு, புவியியல் போன்றவற்றையும் பிரதிநிதித்துவம் செய்கின்றது. இலங்கையின் தேசிய சின்னங்களாக தேசிய கீதம், தேசியக் கொடி, தேசிய இலச்சினை, தேசிய மலர், தேசிய மரம், தேசிய பறவை, தேசிய வண்ணத்துப்பூச்சி, தேசிய இரத்தினக்கல், தேசிய விளையாட்டு என்பன காணப்படுகின்றன. இவை பல்வேறுபட்ட காலப்பகுதிகளில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டன. மேலும் சில சின்னங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், உள்ளூரில் தேசிய சின்னங்களாகக் கருதப்படுகின்றன.

இலங்கையின் தேசிய சின்னங்கள்

இலங்கை அரசியலமைப்புச் சட்டம் தேசியக் கொடி, தேசிய கீதம், தேசிய தினம், தேசிய மொழி ஆகியவற்றை வரையறை செய்கின்றது. தேசிய அரசுப் பேரவையினால் அரசியலமைப்புச் சட்டம் 7 செப்டம்பர் 1978 அன்று பிரகடணம் செய்யப்பட்டது. 14 நவம்பர் 1987 அன்று இலங்கை நாடாளுமன்றம் இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் பதின்மூன்றாவது திருத்தம் மூலம் சிங்கள, தமிழ் மொழிகளை தேசிய மொழிகளாக அறிவித்தது.



தேசிய கீதம்
இலங்கையின் தேசிய கீதமாக “சிறீ லங்கா தாயே” இரவீந்திரநாத் தாகூரினால் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது. பின்பு இது ஆனந்த சமரக்கோனால் 1940 ஆம் ஆண்டு பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் பண்ணமைக்கப்பட்டது. பின் 1951 ஆம் ஆண்டு இலங்கையின் தேசிய கீதமாக பிரகடனப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் சிங்களத்தில் எழுதப்பட்டு பின்னர் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டது. 4 பெப்ரவரி 1952 அன்று, நான்காவது சுதந்திர தின விழாவின்போது முதன்முதலாக பாடப்பட்டது.

தேசியக் கொடி
இலங்கையின் தேசியக் கொடியில் வலது முன்னங்காலில் வாள் தாங்கிய சிங்கம் சிங்களவரையும் முதலாவது சிங்கள அரசனையும் குறிக்கிறது. பின்புலத்திலுள்ள பழுப்புச் சிவப்பு / கடும் சிவப்பு நிறம் பௌத்த மதத்தைக் குறிக்கிறது. நான்கு மூலைகளிலும் உள்ள அரச இலை பௌத்தத்தின் நான்கு உயர்ந்த உண்மைகளைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. சுற்றியுள்ள பொன் மஞ்சள் நிற எல்லை பௌத்த துறவிகளின் சமூகத்தைக் குறிக்கிறது. கொடியின் இடது பக்கமுள்ள பச்சை, குங்குமப்பூ நிறங்களினாலான செங்குத்தான இருகோடுகள் முறையே முஸ்லிம், தமிழ் சமூகங்களைக் குறிக்கின்றன. தற்போதுள்ள கொடி 1950 இல் உள்வாங்கப்பட்டது.

தேசிய இலச்சினை
இலங்கையின் தேசிய இலச்சினை இலங்கை அரசாங்கத்தினால் நாட்டின் நிர்வாக, அரசாங்க தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய குடியரசு இலச்சினை 1972 இல் நாடு குடியரசு அரசாக அறிவிக்கப்பட்டதில் இருந்து பாவனையில் உள்ளது. இவ்விலச்சிணையில் பழுப்புச் சிவப்பு பின்புலத்தில் முன்னங்காலில் வாள் தாங்கிய சிங்கம் அமைந்திருக்க, அதனைச் சுற்றி நீல அல்லியின் பூவிதழ்கள் உள்ளன. மேலும், நெல் கொத்து, தானியக் குடுவை, தர்மசக்கரம், சூரியன், சந்திரன் ஆகியன காணப்படுகின்றன.

தேசிய தினம்
இலங்கை பிரித்தானியாவிடமிருந்து 4 பெப்ரவரி 1948 அன்று சுதந்திரமடைந்தது. இதனால், ஒவ்வொரு வருடமும் 4 பெப்ரவரி அன்று சுந்திர தினம் கொண்டாடப்படுகிறது. 4 பெப்ரவரி இலங்கையின் தேசிய தினமாகும்.

தேசிய மொழி
இலங்கையின் தேசிய மொழிகளாக சிங்களமும் தமிழும் உள்ளன. இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காம் அத்தியாயம் 19 ஆம் சரத்தின்படி, சிங்களமும் தமிழும் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தேசிய மலர்
26 பெப்ரவரி 1986 அன்று இலங்கையின் தேசிய மலராக நீலோற்பலம் பிரகடனப்படுத்தப்பட்டது. இம்மலர் இலங்கையின் பல நீரோடையிலும் பொதுவாக வளரக்கூடியது. இது நீலோற்பம், நீலாம்பல், நீல அல்லி, நீலத்தாமரை ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றது. இப்பூ உண்மை, தூய்மை, ஒழுக்கம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதப்படுகின்றது. இது புத்தருடனும் இலங்கையின் வரலாற்றில் சடங்கு மலராக பயன்பாட்டுடனும் தொடர்புபட்டது.

தேசிய மரம்
26 பெப்ரவரி 1986 அன்று இலங்கையின் தேசிய மரமாக நாகமரம் அறிவிக்கப்பட்டது. இது இலங்கையின் வளரும் மரம், பயன்பாடு, வரலாற்றினதும் கலாச்சாரத்தினதும் முக்கியத்துவம், தனித்துவத்துவம், பரம்பல், நிறம், இயற்கை போன்ற காரணங்களினால் தெரிவு செய்யப்பட்டது. தேரவாத பௌத்தம் இம்மரத்தை ஞானத்தின் அடைதலுக்கான ஒன்றாகக் கருதுகின்றது.

தேசியப் பறவை
இலங்கைக் காட்டுக்கோழி இலங்கையின் தேசியப் பறவையாகும். இது இலங்கைக்கு உரித்தான பறவையாகும். இது பொதுவாக தேசிய பூங்காக்கள், கானகம், அடர்த்தியான குறுங்காடுகள் ஆகியவற்றில் காணப்படும்.

தேசிய வண்ணத்துப்பூச்சி
இலங்கை அழகி என்ற வண்ணத்துப்பூச்சி இலங்கைக்குரியதும் தேசிய வண்ணத்துப்பூச்சியுமாகும். மேலும், இது இலங்கையிலுள்ள பெரிய வண்ணத்துப்பூச்சியும், பரந்து காணப்படும் வண்ணத்துப்பூச்சியுமாகும். மினுமினுப்பான கருப்பு நிறத்தில் பிரகாசமான மஞ்சள் நிறத்தையும், வசிகரமான அலங்காரத்தையும் கொண்டுள்ளது.

தேசிய இரத்தினக்கல்
சபையர் நீலக் கல் இலங்கையின் தேசிய இரத்தினக்கல் என ஒக்டோபர் 2003 இல் பிரகடணப்படுத்தப்பட்டது. 2 ஒக்டோபர் 2003 அன்று 4.50 இலங்கை ரூபா பெறுமதியான தபால் தலை அறிவிப்பைத் தொடர்ந்து வெளியானது. இலங்கை நீலக்கற்களுக்கு புகழ்பெற்ற ஒரு இடமாகும்.

தேசிய விளையாட்டு
கைப்பந்தாட்டம் இலங்கயைின் தேசிய விளையாட்டாக 1991 இல் அறிவிக்கப்பட்டது. கைப்பந்தாட்டம் இலங்கைக்கு 1916 இல் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. அது அறிவிக்கப்படுமுன் இலங்கையின் தேசிய விளையாட்டாக எல்லே காணப்பட்டது.

உலக முடிவு

உலக முடிவு (World's End) எனப்படும் இடம் இலங்கையின் நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஓட்டன் சமவெளி தேசிய வனத்தில் அமைந்துள்ளது. இது ஒரு மிகவும் நேரான செங்குத்துப்பாறையாகும். மேலிருந்து கீழாக இது 4000 அடி (1200 மீட்டர்) ஆழமுள்ளது. இது ஓட்டன் சமவெளியில் அதிகமானோர் சென்று பார்வையிடும் இடமாகவுள்ளது. அத்தோடு நுவரெலியா மாவட்டத்திலும் இலங்கையிலும் அதிகமான உல்லாசப் பயணிகளைக் கவரும் இடமாகவுள்ளது.

உலக முடிவு
உலக முடிவு, இலங்கை

உலக முடிவு மூன்று பிரதான செங்குத்துப்பாறைகளைக் கொண்டுள்ளது. பெரும் உலக முடிவு உள்ள இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு சிறிய செங்குத்துப்பாறை அமைந்துள்ளது. 1000 அடி (300 மீட்டர்) கீழ்நோக்கிச் செல்லும் இதனை சிறிய உலக முடிவு என அழைப்பர். அதனை அண்மித்து மிகச்சிறிய உலக முடிவு உள்ளது.



இங்கிருந்து தென் பக்கமாக 81 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்து சமுத்திரத்தை தெளிவான காலநிலையில் அவதானிக்கலாம். இது மத்திய மாகாணத்தில் அமைந்திருக்க, இதன் மறுபக்கத்தில் சப்பிரகமுவா மாகாணம் அமைந்துள்ளது. எனவே, இச்செங்குத்துப்பாறையில் இருந்து விழுந்தால் வேறுமாகாணத்தில்தான் போய்ச் சேர முடியும் என்று நகைச்சுவையாகச் சொல்வதுண்டு. அரிதாக இங்கு தற்கொலை செய்து கொள்வதும், தவறிவிழுவதும் நிகழ்வதுண்டு. பனிமூட்டமுள்ள காலங்களில் இங்கிருந்து பார்க்கும்போது மறுபகுதி தெரியாமல் திகில் காட்சியை வழங்குவதாலும், இதற்குமேலும் செல்ல முடியாத 4000 அடி பள்ளம் உள்ளதாலும், உலக முடிவு என்ற பெயரைப் பெற்றது.

கிரந்திநாயகம்

கிரந்திநாயகம் என்பது முண்மூலிகைக் குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவர இனமாகும். இது மத்திய அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டாலும், தென் மற்றும் தென்கிழக்காசியாவின் பல வெப்ப வலயம் நாடுகளில் இயல்பான வளர்கிறது. இதன் தாவரவியற்பெயர் “ருயெலியா ரியூப்ரோசா” (Ruellia tuberosa) என்பதாகும். இத்தாவர இலைகளை பழுப்பு வசிகரன் போன்ற பட்டாம்பூச்சிகள் உணவாக் கொள்கின்றன.



கிரந்திநாயகம்
உலர்ந்த பழமும் பூவும்
திணை தாவரம்
தரப்படுத்தப்படாத பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத இயுடிகொட்ஸ்
தரப்படுத்தப்படாத அஸ்டேரிட்ஸ்
வரிசை லமியால்ஸ்
குடும்பம் முண்மூலிகை
பேரினம் ருயெலியா
இனம் ரு. ரியூப்ரோசா

இது ஒரு சிறிய ஈராண்டுத் தாவரம் ஆகும். இதில் தடிமனான கிழங்கும், குழாய் வடிவ ஊதா நிறப் பூக்களும் காணப்படும். இதன் காய் 2 செ.மீ நீளமுடையதும், சுமார் 20 விதைகளைக் கொண்ட செசிலிட்டி விதையுறையில் அமைந்திருக்கும். நீரில் அல்லது உமிழ்நீரில் பட்டால், இதன் உலர்ந்த பழம் வெடிக்கும் தன்மையைக் கொண்டிருப்பதால் சிறுவர்கள் விளையாடப் பயன்படுத்துவர். நீரில் / உமிழ்நீரில் அமிழ்த்தினால் இது “டப்” என்ற ஒலியுடன் வெடிக்கும். இதனால் இதனை வெடிக்காய் எனவும் மரத்தை வெடிக்காய் மரம் என அழைப்பர்.

கிரந்திநாயகம் ஈரலிப்பான, நிழலுள்ள இடங்களில் காணப்படும். ஆயினும், இது புல்வெளிகளிலும் பாதை ஓரங்களிலும் வளரும். இது பயிர்ச்செய்கை செய்யப்படும் இடங்களிலும் வாழிட சூழலிலும் வளர்வதால், இதனை களையாகக் கருதுகின்றனர். உள்ளூர், ஆயுர்வேத வைத்தியத்தில் இது பயன்படுத்தப்படுகின்றது. சிறுநீர்க்கோளாறு, நீரிழிவு எதிர்ப்பு, காய்ச்சலடக்கி, வலிநீக்கி, வயிற்றுப் புண், கொணோறியா போன்ற சிலவற்றுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

மட்டக்களப்பு பழைய வெளிச்சவீடு

மட்டக்களப்பு பழைய வெளிச்சவீடு அல்லது மட்டக்களப்பு பண்டைய கலங்கரை விளக்கு என்பது பிரித்தானியரால் கட்டப்பட்டு தற்போது எச்சமாகக் காணப்படும் வெளிச்சவீடு ஆகும். இது தற்போது
பாலமீன்மடு, முகத்துவாரத்தில் அமைந்துள்ள வெளிச்சவீட்டிலிருந்து மேற்காக சுமார் 500 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. தற்போதைய வெளிச்சவீடு 1913 இல் கட்டப்படும் வரை அதுவே மட்டக்களப்பின் கலங்கரை விளக்காக இருந்தது. இது மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

மட்டக்களப்பு பழைய வெளிச்சவீடு




தற்போது அடிப்பாகத்துடன் இருந்து மேலாக சுமார் 15 அடி உயரம் வரையில் இதன் எச்சம் மீதமாகவுள்ளது. இதில் செங்கற்களையும் நடுவில் இருப்புச் சட்டத்தையும் காணக்கூடியவாறு உள்ளது. இதனைச் சுற்றி பற்றைக் காடுகளும் குறிப்பாக ஈச்சை மரங்களும் பனை மரங்களும் உள்ளன. தற்போதுள்ள வெளிச்சவீடு போன்று உருளை அமைப்பில் இல்லாமல் சதுரமாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை அதன் எச்சங்களில் இருந்து அறியலாம். இது பற்றிய குறிப்பு எதுவும் அப்பகுதியில் இல்லை. வாய்வழி தகவலின்படி, இது தற்போதைய வெளிச்ச வீட்டைவிட உயரம் குறைந்து காணப்பட்டதாகத் தெரிகிறது. தற்போதையது 92 அடி (28 மீட்டர்) உயரமுள்ளது. மேலும், தற்போதையது கடலுக்கு அண்மையில் இருக்க பழையது சற்றுத் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது.

செரெண்டிபைட்

செரெண்டிபைட், செரெண்டிபைட்டு அல்லது செரெண்டிப்பைட் (Serendibite) என்பது முதன்முதலில் 1902 இல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் அரிதான நீர்வகை சிலிகேட்டுகள் வகைக் கனிமம் ஆகும். இது முதன்முதலாக இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதால், இதற்கு இலங்கையின் பண்டைய அரபு மொழிப் பெயரான செரெண்டிப் என்ற பெயருடன் கூடிய பெயர் சூட்டப்பட்டது. இதனை இரத்தினக் கல்லாகவும் பயன்படுத்துகின்றனர். இது அரிதாகக் கிடைப்பதால் பெறுமதி மிக்கதாகவுள்ளது.

செரெண்டிபைட்

செரெண்டிபைட் ஒரு சிலவே காணப்பட்டது. ஆனால் பர்மாவில் (மியான்மர்) குறிப்பிடத்தக்களவு கற்கள் கிடைத்தன. அதனால் விலையும் குறிப்பிட்டளவு குறைந்தது. ஆரம்பத்தில் இரத்தினக்கல் தரம் உடைய கனிமங்கள் இலங்கையின் இரத்தினபுரியில் 1990 களில் கிடைத்தன. பின்னர், 2005 இல் பர்மாவின் மொகோக் பள்ளத்தாக்கிலும் கிடைக்கத் தொடங்கின. மேலும், செரெண்டிபைட் கனிமம் கனடா, மடகஸ்கார், ரஸ்யா, தன்சானியா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய இடங்களிலும் கிடைக்கிறது.

இக்கனிமம் கருங்கல் பாறையினால் உள்வாங்கப்பட்ட காபனேற்று பாறை உருமாற்ற போரானுடன் தொடர்புபட்ட ஸ்கான் கனிமத்துடன் காணப்படுகிறது. செரெண்டிபைட்டுடன் தொடர்புபட்ட கனிமங்களாக ஈரொபிசைட்டு, ஸ்பினல், புளோகோபைட், ஸ்காபோலைட், கால்சைட், ரெமோலைட், அபடைட், கிராண்டிடைரைட், சிங்கலைட், கையலோபேன், புளோரோ-யுவைட், பாகசைட், கிளினோசோய்சைட், போஸ்டேரைட், வோவிக்கைட், கிராபைட் போன்றன காணப்படுகின்றன. செரெண்டிபைட் கல்சியம், மக்னீசியம், அலுமினியம், சிலிக்கான், போரான்,  ஆக்சிசன் (ஒக்சிசன்) ஆகியவற்றிலான சிக்கலான வேதியல் கலவையினைக் கொண்டுள்ளது. இதனை சபைரின், சோசிசைட் ஆகியனவற்றில் ஒன்று என இலகுவாக குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியது. ஆயினும், இதனுடைய பிரலிபலிப்பு அளவு, இரட்டைப் பண்பு, நிறமாலையியல் தன்மை ஆகியன தனித்தன்மை வாய்ந்தவை. மோவின் அளவுகோலின்படி, செரெண்டிபைட்டின் உறுதி விகிதம் 6.5 முதல் 7 ஆகும். இதனுடைய பிரலிபலிப்பு அளவு 1.701-1.706 (சோசிசைட்டை ஒத்தது) ஆகவும், அடர்த்தி 3.42-3.52 (புட்பராகத்தை ஒத்தது) ஆகவும் உள்ளது. சமச்சீர் மைய முச்சரிவு படிக வகை படிக அமைப்பைக் கொண்ட இது பிளப்பு அற்றது.

இலங்கையில் கிடைக்கும் செரெண்டிபைட் இரத்தினக்கல் பச்சை-நீலம் அல்லது ஊதா-நீலம் நிறத்திலும், பொதுவாக கருப்பாகத் தெரியும் பர்மிய செரெண்டிபைட் இரத்தினக்கல் மிகவும் கருமையாக நீலப் பச்சை நிறத்திலும் காணப்படுகின்றது. மேலும், இது மங்கிய மஞ்சள், நிலப்பச்சை, சாம்பல் நீலம் ஆகிய நிறங்களிலும் கிடைக்கின்றது. பட்டை தீட்டி பளபளப்பாக்கப்பட்ட செரெண்டிபைட் கவர்ச்சியான கண்ணாடி போன்ற பளபளப்பைக் கொண்டிருக்கும். இது ஒளிபுகும் தரத்தைக் கொண்டிருந்தாலும், பர்மிய வகை மிகவும் கருமையாக ஒளிபுகாதவாறு தோற்றமளிக்கும்.

உலக மொழி

உலக மொழி என்பது பன்னாட்டளவில் பேசப்படுவதும் இரண்டாவது மொழியாக அதிகளவான மக்களால் பயின்று பேசப்படுவதும் ஆகும். உலக மொழி அதிகளவான மக்களால் பேசப்படுவது மாத்திரம் அல்ல, அது உலகில் பரம்பல் உள்ளதும், சர்வதேச அமைப்பு மற்றும் பண்ணுறவாண்மை ஆகியவற்றில் பயன்படுத்தப்படுவதும் ஆகும். இன்று மிகவும் பரவலாக பேசப்படுவதும் வேகமாக பரவுவதுமான மொழியாக ஆங்கிலம் உள்ளது. இதனை 980,000,000 இற்கு மேற்பட்டோர் முதலாவதும் மொழியாகவும் இரண்டாவதும் மொழியாகவும் பயன்படுத்துகின்றார்கள்.

உலக மொழி

வரலாறு

வரலாற்று மொழிகள் தொடர்பாடலில் பன்னாட்டு முக்கியத்துவம் உள்ளவையாக வரலாற்றுப் பேரரசுகளில் காணப்பட்டன. பண்டைய எகிப்தில் எகிப்து மொழியும், பண்டைய அண்மைக் கிழக்கில் பல மெசொப்பொத்தேமியா நாகரீகங்களிலும் பேரரசுகளிலும் சுமேரிய, அக்காடியன், அராமேயம் ஆகிய மொழிகளும் காணப்பட்டன. பண்டைய கிரேக்க மொழி கிரேக்க குடியிருப்புக்களில் பல பேச்சு வழக்குகளில் இருந்ததுடன், மக்கெடோனியாவை பேரரசர் அலெக்ஸ்சாண்டர் வெற்றி கொண்டதன் பின், ஹெலனிய காலத்தில் கொய்னி கிரேக்க மொழியின் பரிணாமம் பெற்றது. மேலும், தொடர்ச்சியாக உரோமப் பேரரசின் கிழக்குப் பகுதியிலும், பைசாந்தியப் பேரரசின் பகுதிகளிலும் கிரேக்கம் காணப்பட்டது.


உரோமைப் பேரரசில் இலத்தீன் காணப்பட்டதுடன் தற்போதும் கத்தோலிக்க உலகில் நிர்ணயிக்கப்பட்ட வழிபாட்டு மொழியாகவும் உள்ளது. சீன வரலாற்றுக் காலத்தில் கிழக்காசியாவில் செம்மொழிச் சீனம் காணப்பட்டது. பல பாரசீகப் பேரரசுகளில் பாரசீகம் காணப்பட்டதுடன், இஸ்லாமிய உலகில் அரபிக்குப் பின் இரண்டவது தொடர்பாடல் மொழியாகவும் இருந்தது. பண்டைய மற்றும் மத்தியகால வரலாற்றுக் காலத்தில், தெற்கு ஆசியா, தென்கிழக்காசியா, நடு ஆசியா ஆகியவற்றில் இருந்த பல அரசுகளில் சமஸ்கிரதம் காணப்பட்டதுடன் இலத்தீன் போன்று இதுவும் இந்து சமயங்களில் முக்கிய வழிபாட்டு மொழியாகக் காணப்படுகின்றது.

உரோமைப் பேரரசில் தொடர்பாடல் மொழியாக இலத்தீன் மொழியின் பங்கு உரோமானிய மொழிகளின் முக்கியத்துவம் மிக்கது. நடுநிலக் கடல் பகுதியில் இத்தாலி மொழி எப்போதும் முக்கியத்துவம் கொண்டிருந்ததும், இப்போதும் கத்தோலிக்க திருச்சபை தலைமைத்துவத்தில் உள்ளோரிடன் அதிகம் பேசும் மொழியாகவும், இசையிலும், நாகரீக உற்பத்திகளிலும், அறிவியல் சொற்களிலும் இதன் செல்வாக்கு அம்மொழியின் முக்கியத்துவத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. உதுமானியப் பேரரசின் முதன்மை மொழியாக இருந்த துருக்கி மொழி குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. ஹெலனிய காலத்தில் கொய்னி கிரேக்கம் “உலக மொழி” என்ற நிலையி; இருந்தது. ஆனாலும், ஸ்லாவிக், அரபி, துருக்கி மொழிகளின் விரிவாக்கத்தினால் தற்கால கிரேக்கத்தின பரம்பலில் தாக்கம் செலுத்தின. அராபிய, துருக்கிய மொழிகளின் பரம்பல் முறையே கலிபாக்களினதும், துருக்கிய கானேடுகளினதும் விருப்பத்திற்குள்ளாகின.

வாழும் உலக மொழிகள்

வாழும் உலக மொழி பின்வரும் தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும் என சில மூலங்கள் தெரிவிக்கின்றன:
  • அதிகளவானோர் பேசுதல்
  • தாய் மொழி அற்றவர்களின் ஓர் உறுதியான பகுதியாயிருத்தல்
  • சில நாடுகளில் உத்தியோகபூர்வத் தகுதி
  • உலகில் சில பிரதேசங்களுக்கிடையே பயன்பாடு
  • ஒரு மொழி சார் சமூகம் இன ரீதியாக கடுமையாக வறையறுக்கப்படாதிருத்தல்
  • ஒன்று அல்லது அதிகமான ஏற்றுக் கொள்ளப்பட்ட பதிவாளர்களால் ஓர் அந்நிய மொழியாக பரவலாக கற்பிக்கப்படல்
  • மொழி சார் தனிச்சிறப்புக் கொண்டிருத்தல்
  • பன்னாட்டு உறவுகளில் பயன்பாடு
  • சர்வதேச அமைப்புகளில் பயன்பாடு
  • அகாதமியில் பயன்பாடு
  • இலக்கியத்தில் குறிப்பிடத்த இடம்

100 மில்லியன் பேருக்கும் அதிகமானோர் பேசும் ஜப்பான் போன்ற சில மொழிகள் பட்டியலிடப்படவில்லை. உலக மொழியாக பட்டியலிடப்பட்ட மொழிகளுடன், பன்னாட்டளவில் மிகவும் குறிப்பிடத்தக்க மொழிகளில் ஒன்றாக ஐப்பானிய மொழி கருதப்பட்டாலும், அது உலக மொழியாகக் கருதப்படுவதில்லை. ஐப்பான் கிட்டத்தட்ட ஒரே இன, கலாச்சார, மொழியினரின் பிராந்தியமாக உள்ளது. ஆயினும், ஜப்பானியர் சமூகங்களிடையேயான தொடர்பாடலில் மிகவும் சிறிய வரலாற்றைக் கொண்டுள்ளனர். அவர்களின் வெளிநாட்டுச் சமூகம் இனத்துடன் மிகவும் நெருக்கமாக இருந்ததுடன், அதற்கு வெளியே தாய் மொழியாக அல்லது முதலாவது மொழியாக அவர்கள் தங்கள் மொழியைப் பகிர்ந்து கொள்ளவில்லை. 1980 களில் பன்னாட்டு ஆர்வம் பல பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் என்பவற்றை உருவாக்கின.

உலக மொழிகளாக பெருமளவில் கருதப்படும் மொழிகள் பின்வருமாறு:

மொழி தாய்மொழி மொத்தம்
ஆங்கிலம் 372 மில்லியன் 1500 மில்லியன்
ஸ்பானிஸ் 480 மில்லியன் 567 மில்லியன்
பிரெஞ்சு 80 மில்லியன் 274 மில்லியன்

பிற மூலங்கள் உலக மொழிகளாக பின்வரும் மொழிகளைக் குறிப்பிட்டாலும், கடுமையான நிர்ணய மூலங்கள் அவற்றை மேலான பிராந்திய மொழிகள் எனக்குறிப்பிடுகின்றன.

மொழி தாய்மொழி மொத்தம்
மாண்டரின் 898 மில்லியன் 1091-1151 மில்லியன்
அரபி 313 மில்லியன் 423 மில்லியன்
போர்த்துக்கீசம் 220 மில்லியன் 260 மில்லியன்
உருசியம் 171 மில்லியன் 260 மில்லியன்
ஜெருமன் 95 மில்லியன் 105-130 மில்லியன்

பிற மேலான பிராந்திய மொழிகள்

பிற மேலான பிராந்திய மொழிகளின் முக்கியத்துவம் என்பது சில வேறுபட்ட அளவு நிர்ணயங்கள் மூலம் நடப்பு உலக மொழிகளாகக் கருதப்படுகின்றன. அம்மொழிகள் பின்வருமாறு:

மொழி தாய்மொழி மொத்தம்
இந்துஸ்த்தானி (இந்தி மண்டலம், உருது) 329 மில்லியன்
(இந்தி 260மி, உருது 69மி)
544 மில்லியன்
(இந்தி 381மி, உருது 163மி)
இடச்சு மற்றும் ஆபிரிக்கானா 29 மில்லியன் 46 மில்லியன்
வங்காளம் 242 மில்லியன் 261 மில்லியன்
மலாய் மற்றும் இந்தோனேசியம் 39 மில்லியன் 218 மில்லியன்
சுவாகிலி 16 மில்லியன் 98 மில்லியன்
பாரசீகம் 50-60 மில்லியன் 53-110 மில்லியன்
துருக்கிய மொழி 71 மில்லியன் 71-100 மில்லியன்
இத்தாலி 63 மில்லியன் 66-85 மில்லியன்
தமிழ் 68 மில்லியன் 76 மில்லியன்

சூரிய அடையாள சோதிடம்

சூரிய அடையாள சோதிடம் அல்லது சூரிய இராசி சோதிடம் (Sun sign astrology) என்பது சோதிடத்திலுள்ள ஒரு வகையாகும். இது பல நாளிதழ்களிலும் சஞ்சிகைகளிலும் பலன்களுடன் காணப்படும். சோதிடத்திலுள்ள இலகுவான வழிமுறையாகக் காணப்படும் இது, சூரியனை மையமாகக் கொண்டு கணிக்கப்படுகின்றது. பிறக்கும்போது 12 இராசிகளிலும் சூரியன் எங்கிருந்தது என்பதை வைத்தே பலன் சொல்லப்படுகின்றது. பிறக்கும்போது இருக்கும் இடம் “சூரிய அடையாளம்” அல்லது இராசி என அழைக்கப்படும்.

சூரிய இராசி சோதிடம்

சூரிய அடையாள சோதிடர்கள் அடிப்படை 12 பிரிவுகளையும், எல்லாக் கிரகங்களும் ஒன்றுக்கொன்று நகரும் நடப்பு நகர்வைக் கொண்டு கணிக்கிறார்கள். சந்திரன் மிகவும் வேகமாக நகருவதால் இதனை பிரதானமாகக் கொண்டு நாளாந்த பலன்களை சூரிய அடையாள சோதிடர்கள் கணிக்கிறார்கள்.


வில்லியம் லில்லி முதலாவது சோதிட நாளிதழாக 17 ஆம் நூற்றாண்டில் இருந்தாலும், 1930 வரை சூரிய அடையாள சோதிடம் கண்டுபிடிக்கப்படவில்லை. சோதிடர் ஆர். எச். நைலர் ஆர்101 வான்கப்பல் மோதும் என கணித்து தன் நாளிதழில் வெளியிட்டிருந்தார். இது நைலரை இலகுவான சோதிட முறையைக் கொண்டு நாளிதழில் வெளியிட மேலும் தூண்டியது. சில சோதனைகளின் பின் நைலர் சூரிய அடையாள சோதிடம் பற்றி முடிவெடுத்தார் என நம்பப்படுகிறது.

பின்வரும் அட்டவனை ஒவ்வொரு இராசியினதும் மூலப்பொருள், தன்மை ஆகியவற்றைக் காட்டுகிறது. சூரிய அடையாள ஆரம்ப மற்றும் முடிவு திகதிகள் அண்ணளவாகத் தரப்பட்டுள்ளன. ஏனென்றால் புவியின் பாதையில் ஏற்படும் மாற்றம் ஒவ்வொரு வருடத்திலும் (நாளிலும்) மாற்றம் ஏற்படுத்தக்கூடியது. ஆயினும் மிகவும் சரியான சூரிய அடையாள ஆரம்ப/முடிவு திகதியை பொருத்தமான மென்பொருள் மூலமாகவோ அல்லது வானியல் பஞ்சாங்கத்தின் உதவியுடன் கண்டுகொள்ளலாம்.

இராசி மூலப்பொருள் தன்மை துருவமுனை காலம் (1/2 நாள் வேறுபாடு)
மகரம் நிலம் சுயோட்சை மறை டிசம்பர் 21-சனவரி 20
கும்பம் ஆகாயம் நிலையானது நேர் சனவரி 20-பெப்ரவரி 19
மீனம் நீர் மாறுபடுவது மறை பெப்ரவரி 19-மார்ச் 21
மேடம் நெருப்பு சுயோட்சை நேர் மார்ச் 21-ஏப்ரல் 20
இடபம் நிலம் நிலையானது மறை ஏப்ரல் 20-மே 21
மிதுனம் ஆகாயம் மாறுபடுவது நேர் மே 21-யூன் 21
கடகம் நீர் சுயோட்சை மறை யூன் 21-யூலை 24
சிம்மம் நெருப்பு நிலையானது நேர் யூலை 24-ஆகஸ்ட் 23
கன்னி நிலம் மாறுபடுவது மறை ஆகஸ்ட் 23-செப்டம்பர் 23
துலாம் ஆகாயம் சுயோட்சை நேர் செப்டம்பர் 23-ஒக்டோபர் 23
விருச்சிகம் நீர் நிலையானது மறை ஒக்டோபர் 23-நவம்பர் 23
தனு நெருப்பு மாறுபடுவது நேர் நவம்பர் 23-டிசம்பர் 22

மனிதப் பாதுகாப்பும் முரண்பாடும்

1990 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஐநாவின் வரையறை, மனிதப் பாதுகாப்பு என்பது 'பயத்திலிருந்து விடுதலை' (வன்முறை, பயமுறுத்தல், கட்டாயப்படுத்தல், அடக்குதல், வெளியேற்றல், குற்றச் செயல், யுத்தம்) 'தேவைகளில் இருந்து விடுதலை' (பொருளாதார, சுகாதார, சூழல், சுற்றாடல், கல்வி, ஜீவனோபாயம் ஆகியவை சார்ந்த தேவைப்பாடுகளால் மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்) ஆகிய இரு இலக்குகளையும் தன்னகத்தே கொண்டது.


மனிதப் பாதுகாப்பு அணுகுமுறைகள் பொதுவாக ஏழை மக்களது தேவைகளையும் அத்தேவைகளை அம்மக்கள் பூர்த்திசெய்யத்தக்க அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுப்புக்களையும் ஒருமுகப்பார்வைக்கூடாக விளக்க முற்படுகிறது. ஏனென்றால் முரண்பாடுகள் (பாரியவை) மேற்குறித்த ஐநாவின் இரட்டை இலக்குகளையும் இல்லாமல் செய்து மோசமான பயப்பிராந்தியையும் தேவைகளின் அதிகரிப்பையும் விரைவாகக்கூட்டி அபிவிருத்தியை அபாய நிலைக்கு உட்படுத்துகின்றன. எனவே மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தேவையான பேண்தகு நிலைகொண்ட நீடித்த அபிவிருத்தி வேலைத்திட்டமானது முரண்பாடுகள் பற்றிய உணர்தகு நிலைக்கூடாகவே திட்டமிடப்பட்டு, அமுலாக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு, மீளாய்வு செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட வேண்டியது.

மனித உரிமைகள் மைய அணுகுமுறை

இவ் அணுகுமுறையானது அரசியல் சிவில் உரிமைகளைப் பெறுவதலுடன் சமூகப் பொருளாதார பயன்பாட்டியல் அபிவிருத்தியை வெளிப்படையாக இணைக்கிறது.

வறுமை ஒழிப்புக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறை:
ஒரு குறிக்கப்ட்ட வறுமை பீடித்துள்ள சூழலை பகுப்பாய்வு செய்வதற்கான ஒரு ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்துக்கான வரைபை மனித உரிமைகள் வழங்குகின்றன. இவ் வரைபு அரசியல் காரணிகள், பாதுகாப்பற்ற தன்மை, முரண்பாடு, பிரச்சனை என்பவற்றை கவனத்தில் கொள்கின்றன. பிரிக்க முடியாத உரிமைகளை மையப்படுத்தி அனைத்தையும் உள்வாங்கிய வகையில் பொருளாதார, அரசியல், பாதுகாப்பு அம்சங்களை நேரடிக் கவனத்தில் கொள்ளத்தக்க தந்திரோபாயத்தை ஏற்படுத்த இது உதவுகிறது.

முரண்பாடுகளும் உரிமைகளும்

உரிமை மைய அபிவிருத்தியானது அசமத்துவம், பாரபட்சம், செல்வாக்குமிக்கவர்களால் உரிமை மறுப்பு என்பனவற்றால் எழும் வறுமை நிலையின் மட்டில் அதிக அக்கறையைக் கொண்டது. சர்வதேச மனித உரிமை பிரமாணங்களுக்குப் புறம்பான வகையில் மக்கள் உரிமை மறுக்கப்பட்டு, அபிவிருத்தி மறுக்கப்படுதலும் இங்கு கவனத்தில் எடுக்கப்படுகிறது. ஒரு முரண்பாடுச் சூழ்நிலையில், முரண்பாட்டுக்குட்பட்டுள்ள தரப்பினரால் அல்லது யுத்தத்தில் ஈடுபடுபவர்களால் மக்களின் உரிமைகள் மிக திட்டமிட்ட வகையில் மீறப்படுகின்றன. அத்துடன் யுத்தத்தால் அல்லது முரண்பாட்டால் அதிகம் பொருளாதார இலாபம் பெறுபவர்களும் இதனை ஊக்கப்படுத்துவதுடன் பாதிப்புற்ற மக்களின் அபிவிருத்தியை ஏதோ ஒரு வகையில் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பர். இதனால் அபிவிருத்திப் பணிகள் உரிமை மைய செயற்பாடாகவும் பாதுகாப்புச் சார்ந்த செயற்பாடாகவும் உள்ளன.

பயப் பிராந்தியில் இருந்தும் தேவைகளில் இருந்தும் விடுதலை என்பதில் கவனிக்கப்பட வேண்டிய சில விடயங்கள்.
  • அபிவிருத்தி அல்லது அவசரகால நிலைமை வேலைத் திட்டம் இடம் பெறும் ஒரு சூழலில் மக்கள் ஏன் தாம் பயமுறுத்தப்பட்டதாக, மிரட்டப்பட்டதாக, அச்சுறுத்தப்பட்டதாக உணர்கின்றனர்? தமது பாதுகாப்பு அல்லது உரிமை இல்லாமல் போனதாக உணர்கின்றனர்.
  • சாதாரண மக்கள் அடிபட்டுக் கொள்ளும் அல்லது மோதிக் கொள்ளும் சூழ்நிலையை யார் உருவாக்குகின்றனர்?
  • எவ்வாறு உருவாக்குகின்றனர்? எவ்வாறு மக்களின் அன்றாட வாழ்வில் அபாயத்தை அல்லது மறை தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர்?
  • உள்ளூர் சூழலில் எத்தகைய முரண்பாடுகள் அல்லது பிரச்சனைகள் மக்களின் பாதுகாப்பைப் பாதிக்கின்றன.
  • இத்தகைய சூழல் நிலையில் 'முரண்பாட்டு உணர்தகுநிலை' பொருந்திய அணுகுமுறை நிறுவனத்தால் பணன்படுத்தப்படலாம்.

மனித உரிமைகளும் மனித பாதுகாப்பும் என்பதில் கவனிக்கப்பட வேண்டிய சில விடயங்கள்.
  • அபிவிருத்தி, அவசர கால வேலைத்திட்டத்தில் மக்களின் எந்த உரிமைகள் மீறப்படுகின்றன?
  • எவ்வாறு மீறப்படுகின்றன? யாரால் மீறப்படுகின்றன?
  • இத்ததைய மீறல்கள் எவ்வாறு சாதாரண பாதுகாப்பின் மீது அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன?

பலோலெம் கடற்கரை

பலோலெம் கடற்கரை (Palolem beach) இந்தியாவின் கோவா மாநிலத்தின் தெற்கில் கனகோனாவில் அமைந்துள்ளது. இதிலிருந்து 2.5 கி.மீ தொலைவில் சவுடி நகர் அமைந்துள்ளது. தென் கோவாவின் மாவட்ட தலைநகர் மட்காவில் இருந்து 40 நிமிடத்தில் இதனை வந்தடையலாம். உல்லாசத்துறையின் முக்கிய இணையத்தளமான ரிப் அட்வைசர் (Tripadvisor) 2017 ஆம் ஆண்டு கடற்கரை தரப்படுத்தலின்படி, இதனை இந்தியாவில் முதலாவதாகவும், ஆசியாவில் மூன்றாவதாகவும் தரப்படுத்தியது. தென் கோவாவில் அனகொண்டா கடற்கரை, பட்னெம் கடற்கரை, போலெம் கடற்கரை ஆகியனவும் உள்ளன.

பலோலெம் கடற்கரை
பலோலெம் கடற்கரை
பலோலெம் கடற்கரை பாரியளவில் கெடாமலும் உள்ளூர் மீனவர்களினதும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளினதும் குடியிருப்பாகவுள்ளது. அங்குள்ள பிரதான கிராமத்திலும் கடற்கரையிலும் இவர்கள் குடிசைகளில் வாழ்கிறார்கள். இக்கடற்கரை கிட்டத்தட்ட 1.6 கி.மீ நீளமானதாகவும், அரை வட்ட வடிவமைப்பில் காணப்படுகிறது. இதனால் ஒரு முனையிலிருந்து முழுக் கடற்கரையையும் ஒருவரால் பார்க்க முடியும். கடற்கரையின் இரு முடிவிலும் கடலிலிருந்து நீட்டிக் கொண்டிருக்கும் பாறைகள் காணப்படுகின்றன. கடலின் ஆழம் மொதுவாக அதிகரித்துச் சென்று, கடற்கரை வட முடிவில் ஆழமற்று இருப்பதால், சராசரி நீச்சல்காரர்களுக்கு பாதுகாப்பானதாக, வேகமற்ற நீரோட்டத்தைக் கொண்டு காணப்படுகின்றது. கடற்கரையில் உயிர்காக்கும் உதவியார்கள் உள்ளனர்.


இதன் அருகில் உள்ள வானூர்தி நிலையமாக கோவா சர்வதேச விமான நிலையம் 67 கி.மீ தூரத்தில் உள்ளது. மட்கோன் சந்தியிலிருந்து 30 நிமிடத்தில் அடையக்கூடிய தூரத்தில் கனகோனா தொடரூந்து நிலையம் உள்ளது. ஒவ்வொரு 30 நிமிட இடைவெளியில் கடற்கரைக்குச் செல்லும் பேரூந்து சேவை உள்ளது.

மேட் டாமன் (ஜேசன் போர்ன்) நடித்த த புரூன் சுப்ரிமசி (The Bourne Supremacy) திரைப்படத்தில் கடற்கரை காட்சிப்படுத்தப்பட்டது. இதில் இக்கடற்கரையில் இயற்கை அழகு சிறப்பாக காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, கடற்கரை குடிசைகளும், ஒரு முனையில் பாறைகளை மூடியவாறு இலகுவில் தெரியும் மரம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவ்விடம் உள்ளூரில் குரங்குத் தீவு என்றழைக்கப்படுகின்றது.

பலோலெம் கடற்கரையை ஒட்டியுள்ள தீவில், அமெரிக்க கருத்தியல், நில கலைஞர் ஒருவரால் கற்சிற்பம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதனை “உன்னால் முடிந்தால் கொடு, எடுப்பதாயின் எடு” அல்லது “பணக் கல்” (காசுக் கல்) என்றழைப்பர். மக்கள் விரும்பினால் பணக்கல்லில் காசை விட்டுச் செல்வார்கள் அல்லது எடுத்துச் செல்வார்கள். இது யாத்திரிகளின் இடமாக மாறிவிட்டது.

உலகில் வேகமானவை

உலகில் வேகமானவை என்ற தலைப்பின் கீழ் பல விடயங்கள் உள்ளடக்கப்படும். ஆனாலும், இதனை நிலையான கணிப்பீடாக எடுத்துக் கொள்ள முடியாது. குறிப்பாக மனிதனால் செய்யப்படும் உற்பத்திகள் அவ்வப்போது மாற்றத்திற்குள்ளாகலாம். இன்று வேகமாக உள்ள தொடரூந்து நாளை பின் தள்ளப்படலாம். ஆனாலும், இயற்கையானவற்றில் இம்மாற்றம் ஏற்பட வாய்ப்புக்கள் மிகக் குறைவு. தரையில் வேகமாக ஓடக்கூடிய மிருகம் என்றால், அது வேங்கைதான்.

fastest

வேங்கை (சிவிங்கிப்புலி) மணிக்கு 0 முதல் 10 கி.மீ வேகத்தை 3 வினாடிகளில் எட்டக்கூடியது. நிலத்தில் மணிக்கு 120.7 கி.மீ. (75.0 மைல்) வேகத்தில் ஓடக்கூடியது.

பொரி வல்லூறு மிகவும் வேகமாக பறக்கும் பறவையாகும். மணிக்கு 325 கி.மீ வேகத்தில் பறக்கக்கூடியது. இது இறையைப் பிடிப்பதற்காக கீழே வரும் அதிக நேரமாக மணிக்கு 389 கி.மீ. (242 மைல்) பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விலங்கினங்களில் (நீர், நிலம், ஆகாயம்) இதுவே வேகமானதும் ஆகும்.


கருப்பு மர்லின் என்ற மீன் உலகின் வேகமான மீனும் கடல் விலங்கும் ஆகும். இதன் வேகம் மணிக்கு 129 கி.மீ. (80 மைல்) எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகட்டி வேய்ரன் இ.பி 16.4 (Bugatti Veyron EP 16.4) வேகமான தானூந்தாகும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 431.072 கி.மீ ஆகும். ஆனால், ஏவூர்தி இயக்கத்தில் இயங்கிய திரஸ்ட் எஸ்எஸ்சி (Thrust SSC) என்ற தானூந்து ஒலியைவிட வேகமாக மணிக்கு 1,228 கி.மீ (763 மைல்) வேகத்தில் ஓடியது.

லொக்கீட் எஸ்.ஆர்-71 பிளக்பேர்ட் (Lockheed SR-71 Blackbird) என்ற முற்றிலும் மனித இயககம் கொண்ட வானூர்தி மணிக்கு 3,529.6 கி.மீ. வேகத்தில் பறந்து சாதனை செய்தது. ஆனால், எக்ஸ்-15 (X-15) என்ற நாசாவின் மனித இயக்க, வலுவூட்டப்பட்ட வானூர்தி 6.72 மாக் வேகத்தில் 102,100 அடி (31,120 மீட்டர்) உயரத்தில் மணிக்கு 4,520 மைல் (7,274 கி.மீ) வேகத்தில் பறந்தது.

ஜே.ஆர்-மக்லெவ் (JR-Maglev) என்ற தொடரூந்து உலகில் மிகவும் வேகமாகச் செல்லும் தொடரூந்து என்ற சாதனைக்குரியது. இதன் வேகம் மணிக்கு 360 மைல்கள் (581 கி.மீ) ஆகும்.

டுவிஸ்டா என்ற ராப் பாடகர் ஒரு நிமிடத்தில் 280 சொற்களைப் பாடி, உலகில் வேகமான ராப் பாடகர் என்ற பெயரைப் பெற்றுள்ளார்.

இரண்டு கின்னஸ் சாதனைகளுக்குச் சொந்தக்காரரான மொரிஸ் கட்ஸ் உலகில் வேகமான ஓவியர் என்ற பெயரைப் பெற்றுள்ளார்.

உலகில் மிக வேகமாக மக்களால் பார்க்கப்பட்ட யூடியூப் கானொளியாக “ஜென்டில்மேன்” (“Gentleman” — PSY) பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்றே நாட்களில் இதற்கு 100 மில்லியன் பார்வைகள் கிடைக்கப்பெற்றது.

உலகில் வேகமான மனிதனான உசேன் போல்ட் உள்ளார். இவர் 100 மீட்டர் தூரத்தை 9.58 வினாடிகளில் எட்டினார்.

உலகில் வேகமான பெண்ணாக அமெரிக்கரான புளோரென்ஸ் கிரிபித் ஜோய்னர் உள்ளார். 1988 இல் இவர் 100 மீட்டர் தூரத்தை 10.49 வினாடிகளில் அடைந்தார்.

நடுத்தாடி பல்லியோந்தி உலகில் வேகமான ஊர்வனவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மணிக்கு 40 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.

உலகில் வேகமான பாலூட்டியாக மெக்சிக்கோ சுயேச்சை வால் வௌவால் உள்ளது. அதனால் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பறக்க முடியும்.

உலகில் வேகமான பெரும் சூறாவளியாக 1919 ஒக்லோகமாவைத் தாக்கிய சூறாவளி பதிவு செய்யப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் இதன் வேகம் மணிக்கு 318 மைலாக இருந்ததாக பதிவு செய்துள்ளனர்.

உலகில் வேகமான வான்வெளிக் கலமாக நியூ கொரைசன்ஸ் (New Horizons) உள்ளது. நாசாவினால் புளுட்டோவிற்கு அனுப்பப்பட்ட இது, பூமியைவிட்டு விலகுமுன்பே இதன் வேகம் மணிக்கு 58,536 கி.மீ. என பதிவுசெய்யப்பட்டது.

இதைத் தவிர ஒளி மிக மிக வேகமுடையது. ஒளியின் வேகம் மணிக்கு 671 மில்லியன் மைல் ஆகும்.

அரச மரம்

அரச மரம் (Bo) என்பது இந்தியத் துணைக்கண்டம், இந்தோசீனா பகுதிகளைத் தாயகமாகக் கொண்ட அத்தி இன மரமாகும். இதன் உயிரியல் பெயர் பிக்கஸ் ரிலிஜியோசா (Ficus religiosa) என்பதாகும். இது அரசு, புனித மரம் (Sacred fig), போதி மரம் (bodhi tree) ஆகிய பெயர்களினாலும் அழைக்கப்படுகின்றது. இதனை மரங்களின் அரசன் எனவும் அழைப்பதுண்டு. இது மொராசியே (Moraceae) அல்லது முசுக்கட்டை என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

அரச மரம்

அரச மரம் ஒரு பெரிய, வரண்ட கால ஆண்டுக்கொரு முறை இலையுதிரும் அல்லது அரை-மாறாப் பசுமை மரமும், 30 மீட்டர் (98 அடி) உயரத்திற்கு வளரக்கூடிய மரமும் ஆகும். இதன் அடிமர விட்டம் 9.8 அடி (3 மீட்டர்) வரை வளரக்கூடியது. இலைகள் இதய வடிவமுள்ளதும் தனிச்சிறப்புள்ள நீண்ட நுனி கீழ்நோக்கியவாறு அமைந்தும் காணப்படும். இவை 10-17 செ.மீ (3.9–6.7 அங்குலம்) நீளமுள்ளதும் 8–12 செ.மீ (3.1–4.7 அங்குலம்) அகலமுள்ளதாகவும், இலைக்காம்பு 6–10 செ.மீ (2.4–3.9 அங்குலம்) உள்ளதாகவும் காணப்படும். இதன் சிறிய பழங்கள் 1–1.5 செ.மீ (0.39–0.59 அங்கலம்) விட்டமுள்ளதும், காயாக இருக்கும்போது பச்சை நிறத்தில் இருந்து, பழுத்ததும் கருஞ்சிவப்பாக மாறிவிடும்.

சமயங்களில் அரச மரம்

இந்து, சைனம், பௌத்தம் ஆகிய சமயங்களைச் சேர்ந்தவர்கள் இதனை புனித மரமாகக் கருதுகின்றார்கள்.


கௌதம புத்தர் அரச மரத்தின் கீழ் இருந்து தியானம் செய்கையில் ஞானம் பெற்றார் என பௌத்தர்கள் நம்புகின்றனர். இந்த இடம் தற்போதுள்ள இந்தியாவிள் பீகாரிலுள்ள புத்தகயா என கருதப்படுகின்றது. ஆரம்பத்தில் இருந்த மரம் அழிந்துவிட, அவ்விடத்தில் வேறு மரத்தை நட சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் கிளை ஒன்று இலங்கையின் அனுராதபுரத்தில் கி.மு. 288 இல் நடப்பட்டது. இதனை சிறீ மகாபோதி என்ற பெயரில் அழைக்கிறார்கள். இதுவே உலகிலுள்ள பூக்கும் தாவரங்களில் மிகவும் பழமையானதாகும். தென்கிழக்காசியா தேரவாத பௌத்தத்தில், அரச மரத்தின் பெரும் அடிமரம் பௌத்தர்களின் இடமாகவும் கருதப்படுகின்றது.

இந்து சமய சாதுக்கள் இன்றும் அரச மரத்தின் அடியில் இருந்து தியானம் செய்கின்றனர். இந்துக்கள் மரத்தைச் சுற்றி வழிபடுகின்றனர். காலையில் மரத்தைச் சுற்றி 7 முறை சுலோகம் சொல்லும் வழக்கம் உள்ளது. 27 நட்சத்திரங்களும், 12 இராசிகளும், 9 கிரகங்களும், ஆண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் 27 மரங்களை பிரதிநிதித்துவம் செய்கின்றன என கருதப்படுகின்றது. போதி மரம் பூசம் நட்சத்திரத்தை பிரதிநிதித்துவம் செய்வதாக நம்புகின்றனர்.

இந்து சமய நூல்களின்படி, சரசுவதி ஆறு தோற்றத்துடன் இம்மரத்திற்கு தொடர்பு உள்ளது. பிரம்மாவின் நீர்க்குடத்திலிருந்து புறப்பட்ட நீர் இமயமலையிலிருந்த அரசு மரத்தினூடாக ஒடி சரசுவதி தோன்றியதாக கந்த புராணம் குறிப்பிடுகிறது. ஆயினும், இந்து சமய நூல்கள் குறிப்பிடுவது குருகிலை மரத்தைத்தான் (Ficus infectoria) என ஆர்த்தர் அன்ரனி மக்டொனலும் ஆர்தர் பெரிடேல் கீத்துவும் குறிப்பிடுகின்றனர்.

பயிர்ச் செய்கையும் பயன்பாடும்

உயிரியல் வகைப்பாடு
திணை தாவரம்
பிரிவு பூக்கும் தாவரம்
வகுப்பு மக்னோலியோப்சிடா
வரிசை ரோசாலெஸ்
குடும்பம் மொராசியே
பேரினம் பிக்கஸ்
துணைப்பேரினம் ஆல்
இனம் அரசு

அரச மரம் தோட்டம், பூங்கா ஆகிய இடங்களில் அலங்காரத் தாவரமாக வளர்க்கப்படுகின்றது. இதன் வளர்ச்சிக்கு முழு சூரிய ஒளியும், மணலும், ஈரலிப்பான காலநிலையும் தேவைப்படுகின்றது. இதனை நடும்போது மண்ணின் pH பெறுமானம் 7 அல்லது அதற்குக் கீழ் இருக்க வேண்டும். இதனை வீடுகள் போன்றவற்றின் உள்ளேயும் வளர்க்கலாம். ஆனால், வெளியில் வளர்ப்து சிறப்பானது. கன்றுகளுக்கு முறையான பசளையும், சூரிய ஒளியும், நீரும் வழங்கப்படல் வேண்டும்.

இது சித்த மருத்துவத்தில் 50 இற்கு மேற்பட்ட நோய்களுக்கு பயன்படுத்துவதாக சொல்லப்படுகின்றது. சுவாச நோய், நீரிழிவு, காக்கை வலிப்பு, வாயு சிக்கல்கள், எரிவு நோய்கள், தொற்று, பாலியல் குறைபாடுகள், வயிற்றோட்டம் ஆகியவற்றுக்கு இது மருந்தாகப் பயன்படுகின்றது.

இந்திய அரசின் வழங்கும் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது அரச இலையைப் போன்று அமைக்கப்பட்டுள்ளது.

வேளைக்காரர் கிளர்ச்சி

வேளைக்காரர் கிளர்ச்சி (Velakkara revolt) என்பது சிங்கள அரசனான முதலாம் விஜயபாகுவின் படைப்பிரிவில் இருந்த வேளைக்காரர் படைப்பிரிவனால் ஆட்சிக்கெதிராக நடத்திய கிளர்ச்சியைக் குறிக்கும். "வேளம்" என்பது அரணுள்ள உள் முற்றம் ஆகும். வேளத்தைக் காக்க நியமிக்கப்பட்ட வேளைக்காரர் படைப்பிரிவு அரசரையும், அரச குடும்பத்தையும் காக்க நியமிக்கப்பட்ட சிறப்புப் பிரிவாகும். வேளைக்காரர் அரச காவலர்களாகவும் தமிழ் கூலிப்படையாகவும் காணப்பட்டனர். வரலாற்றில், இது இலங்கையை ஆண்ட தமிழ், சிங்கள மன்னர்களின் நம்பிக்கைக்குரிய படைப்பிரிவாகக் காணப்பட்டது.

ஆட்சி 1 வது விஜயபாகு
காலம் கி.பி. 12ம் நூற்றாண்டு
ஆண்டு சுமார் கி.பி. 1084
இடம் பொலன்னறுவை
முடிவு கிளர்ச்சி அடக்கப்பட்டது

வேளைக்காரர் கிளர்ச்சி

சுமார் கி.பி. 1084 இல் மேற்கு சாளுக்கியத்திற்கு அனுப்பப்பட்ட விஜயபாகுவின் சில அரச தூதரர்கள் தொந்தரவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சோழ அரசுக்கெதிராக குழப்பம் உருவாகியது. முதலாம் விஜயபாகு சோழர்களுக்கு எதிரான போரை அறிவித்து, வேளைக்காரரை அவர்களுக்கெதிராக சண்டையிடக் கட்டளையிட்டான். வேளைக்காரர் தங்கள் தமிழ் உறவினருக்கெதிராக சண்டையிட மறுத்து, விஜயபாகுக்கெதிராக கிளர்ச்சி செய்தனர். அரச காவலர்களை கொலை செய்து, அரண்மனையை எரித்தனர். விஜயபாகு வைக்கிரிகலைக்குத் தப்பியோடினார். ஆனால், பொலன்னறுவை திரும்பவும் கைப்பற்ற திரும்பி வந்தார். பின்னர் கிளர்ச்சித் தலைவர்கள் பிடிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டனர். வேளைக்காரர் தமிழ் கல்வெட்டு ஒன்றை உருவாக்கி புனிதப்பல்லைப் பாதுகாக்க வாக்குக்குறிதியளித்தனர்.

விடுதலைப் புலிகளின் ஆயுத தளபாடங்களின் பட்டியல்

இது விடுதலைப் புலிகளின் ஆயுத தளபாடங்களின் பட்டியல் (Weaponry of LTTE) ஆகும். இதில் காலாட்படை, விமானப்படை, கடற்படை என்பன பயன்படுத்திய ஆயுதங்களும் மற்றும் போர்த் தளபாடங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.

Weaponry of LTTE

காலாட்படை ஆயுதங்கள்

துப்பாக்கிகள்

பெயர் (ஆங்கிலம்) வகை நாடு
Beretta M9 கைத்துப்பாக்கி இத்தாலி
Glock 17 கைத்துப்பாக்கி ஒஸ்ரியா
Browning Hi-Power கைத்துப்பாக்கி அமெரிக்கா
Micro Uzi கைத்துப்பாக்கி இஸ்ரேல்
IMI Desert Eagle கைத்துப்பாக்கி இஸ்ரேல்
M-16 தாக்குதல் துப்பாக்கி அமெரிக்கா
M-16A1 தாக்குதல் துப்பாக்கி அமெரிக்கா
M-16A2 தாக்குதல் துப்பாக்கி அமெரிக்கா
Type 56 தாக்குதல் துப்பாக்கி சீனா
AK 103 தாக்குதல் துப்பாக்கி ரஷ்யா
QBZ-97 தாக்குதல் துப்பாக்கி சீனா
Type 81 தாக்குதல் துப்பாக்கி சீனா
Type 85 தாக்குதல் துப்பாக்கி சீனா
AKS 74U தாக்குதல் துப்பாக்கி ரஷ்யா
AK 47 தாக்குதல் துப்பாக்கி ரஷ்யா
AK-63 தாக்குதல் துப்பாக்கி ஹங்கேரி
Heckler & Koch G3 தாக்குதல் துப்பாக்கி ஜெர்மனி
Beretta M12 துணை இயந்திரத் துப்பாக்கி இத்தாலி
Uzi துணை இயந்திரத் துப்பாக்கி இஸ்ரேல்
MP5 துணை இயந்திரத் துப்பாக்கி ஜெர்மனி
Type 85 SMG துணை இயந்திரத் துப்பாக்கி சீனா
Sterling submachine Gun துணை இயந்திரத் துப்பாக்கி பிரித்தானியா
Type 81 MGS இலகு இயந்திரத் துப்பாக்கி சீனா
RPD இலகு இயந்திரத் துப்பாக்கி ரஷ்யா
M2 Browning கனரக இயந்திரத் துப்பாக்கி அமெரிக்கா
QJG – 89 கனரக இயந்திரத் துப்பாக்கி சீனா
Type 77 கனரக இயந்திரத் துப்பாக்கி சீனா
Dragunov மறைசுடு துப்பாக்கி (சினைப்பர்) ரஷ்யா
PKM GPMG பொது இயந்திரத் துப்பாக்கி ரஷ்யா
Benelli M1 வேட்டைத்துப்பாக்கி வகை இத்தாலி
M203 கைக்குண்டு செலுத்தி அமெரிக்கா
AGS 17 கைக்குண்டு செலுத்தி ரஷ்யா
CIS 40 AGL கைக்குண்டு செலுத்தி சிங்கப்பூர்


இவற்றைத் தவிர இலங்கை மற்றும் இந்திய அமைதிப்படையினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும், முன்னர் பாவனையில் இருந்து, பின்னர் பயன்பாடற்ற ஆயுதங்களும் உள்ளடங்குகின்றன. மேலும், ஒரு சில ஆயுதங்கள் சோதனை அளவிலும், சிறிய அளவிலும், குறிப்பிட்ட தேவைகளுக்காகவும் சிறிய அளவில் பயன்படுத்தப்பட்டன. அவ்வாறான துப்பாக்கிகள் பின்வருமாறு:
  • சுழல் கைத்துப்பாக்கி
  • வேட்டைத் துப்பாக்கி
  • துண் கைத்துப்பாக்கி
  • FN FAL மற்றும் L1A1 SLR தாக்குதல் துப்பாக்கிகள்
  • M79 அல்லது Heckler & Koch HK69A1 கைக்குண்டு செலுத்தி அல்லது மாற்றத்திற்குள்ளான உள்ளூர்த் தயாரிப்பு
  • Rheinmetall MG 3 பொது இயந்திரத் துப்பாக்கி

கவச வாகன எதிர்ப்பு ஆயுதங்கள்

பெயர் (ஆங்கிலம்) குழல் விட்டம் நாடு
M40A1 106 மிமீ அமெரிக்கா
Carl Gustav 84 மிமீ சுவீடன்
SPG-9M 73 மிமீ போலாந்து
RPO-A Shmel 93 மிமீ ரஷ்யா
M141 SMAW-D (BDM) 83 மிமீ அமெரிக்கா
PF-89 80 மிமீ சீனா
RPG 22 66 மிமீ ரஷ்யா
Type 69 40 மிமீ சீனா
RPG – 7 40 மிமீ ரஷ்யா

பீரங்கிகள்

பெயர் (ஆங்கிலம்) குழல் விட்டம் நாடு தூரம்
Type 66 152 மிமீ சீனா 17.2 கிமீ
Type 59-1 130 மிமீ சீனா 27-37 கிமீ
Type 86 122 மிமீ சீனா 21 கிமீ
Type 83 122 மிமீ சீனா 15.4 கிமீ
Type 56 85 மிமீ சீனா 15.6 கிமீ
* M401 பின்தள்ளும் பீரங்கி குழாயைக் கொண்டு உள்ளூரில் புலிகள் தயாரித்தது. இதன் குழல் விட்டம், எறி தூரம் பற்றிய விபரங்கள் தெரியாது.

சிறு பீரங்கிகள்

பெயர் (ஆங்கிலம்) குழல் விட்டம் நாடு தூரம்
Type 86 (W86) 120 மிமீ சீனா 6.4 கிமீ
M-43 (PM-43) 120 மிமீ ரஷ்யா 6.4 கிமீ
Type 87 (W87) 81/82 மிமீ சீனா 4.7 கிமீ
Type 63-1 60 மிமீ சீனா 1.1 கிமீ

விமான எதிர்ப்பு ஆயுதங்கள்

பெயர் (ஆங்கிலம்) குழல் விட்டம் நாடு
Type 65/74 (M1939) 37 மிமீ சீனா
Type 61 25 மிமீ சீனா
ZU-23-2 23 மிமீ ரஷ்யா
GIAT M693 20 மிமீ பிரான்ஸ்
Type 56 (ZPU-4) 14.5 மிமீ சீனா
Type 58 (ZPU-2) 14.5 மிமீ சீனா
Type 75-1 (ZPU) 14.5 மிமீ சீனா
Type 54 12.7 மிமீ சீனா
SA-14 ஏவுகணை ரஷ்யா
* இரண்டு வகையான 30 மிமீ வகையைச் சேர்ந்த விடுதலைப் புலிகள் தயாரித்த விமான எதிர்ப்பு ஆயுதங்கள் கையிருப்பில் இருந்தன.

உள்ளூர் எறிகணைகள்

பெயர் நீளம் வெடிபொருள் நிறை தூரம்
பாபா மோட்டார் 4 அடி 70 கிலோ 15 கிமீ
பண்டிதர் 1550 14 அடி 214 கிலோ 1 கிமீ
பாசிலான் 2000 5 அடி 50 கிலோ 25 கிமீ
- 10 அடி 300 கிலோ 600 மீ

* ரிஎன்ரி வெடிபொருள் பாபா மோட்டாருக்குப் பயன்படுத்தப்பட்டது. ஏனையவற்றுக்கு சி4 வெடிபொருள் பயன்படுத்தப்பட்டது.
* பல ரக எறிகணைகளும், ஊந்துகணைகளும் விடுதலைப் புலிகளின் தொழிற்சாலைகளில் செய்யப்பட்டன.

பல்குழல் எறிகணை

பெயர் (ஆங்கிலம்) குழல் விட்டம் (குழாய்கள்) நாடு தூரம்
Type 63 107 மிமீ (12 குழாய்கள்) சீனா 8.5 கிமீ
- 107 மிமீ (6 குழாய்கள்) சுய தயாரிப்பு 8 கிமீ

கவச வாகனங்கள்

பெயர் (ஆங்கிலம்) பிரதான ஆயுதம் நாடு
T-55 100 மிமீ பீரங்கி செக் குடியரசு
BMP-1 73 மிமீ பீரங்கி ரஷ்யா
Type 86 76 மிமீ பீரங்கி சீனா
Buffel 37 மிமீ பீரங்கி தென் ஆபிரிக்கா

* இவற்றைத் தவிர இலங்கை இராணுவத்திடம் இருந்து கைப்பற்றிய கவச வாகனங்கள் மற்றும் பொதுப் பாவனை வாகனங்களைக் கொண்டு பல கவச வாகனங்களையும் துருப்புக் காவி கவச வாகனங்களையும் புலிகள் தயாரித்திருந்தனர்.

கன்னிவெடி, கைக்குண்டு, பிற வெடிபொருட்கள்

பெயர் வகை
வகை 72 ஏ ஆள் எதிர்ப்பு
பி4 எம்கே 1 ஆள் எதிர்ப்பு
ஜோனி-99 (ரங்கன் 99) ஆள் எதிர்ப்பு
விஎஸ்VS-50 ஆள் எதிர்ப்பு
ஜோனி-95 ஆள் எதிர்ப்பு
கிளைமோர்
(எஸ்என் 96, எஸ்என் 2000)
ஆள் எதிர்ப்பு
மாற்றப்பட்ட மோட்டார் ஆள் எதிர்ப்பு
அருள் துப்பாக்கி குண்டு ஏறி குண்டு
கைக்குண்டு
(எஸ்எப்ஜி 82, எம்67, 82-2, உள்ளூர் தயாரிப்பு)
ஏறி குண்டு
அம்மான் 2000 எம்கே I கவச வாகன எதிர்ப்பு
அம்மான் 2000 எம்கே II கவச வாகன எதிர்ப்பு
* ஆள் எதிர்ப்பு வெடிபொருட்கள் சதாரண வாகனங்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படும்.
* பல்வகை கன்னிவெடிகளும் வெடிபொருட்களும் விடுதலைப் புலிகளினால் தயாரிக்கப்பட்டன.
* தற்கொலைப் படையினர் அணியும் அங்கியும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட, வெடிபொருட்கள் கொண்ட ஓர் உள்ளூர்த் தயாரிப்பு

விமானப்படை

பெயர்
சிறு இலகுரக வானூர்தி
சிலின் 143
ரொபின்சன் ஆர்-44 உலங்கு வானூர்தி
ஆளில்லாத வானூர்தி

கடற்படை

விரைவு தாக்குதல் படகுகள்

பெயர் / வகை ஆட்கள்
முராஜ் எம்கே I 10
முராஜ் எம்கே II 10
விரைவு தாக்குதல் கலம் வகை 1 5
விரைவு தாக்குதல் கலம் வகை 2 5
பொருள் ஊர்தி 3

தாக்குதல் படகுகளில் பொருத்தப்பட்ட பிரதான ஆயுதங்கள்

பெயர் (ஆங்கிலம்) குழல் விட்டம் நாடு
Type 61 25 மிமீ சீனா
ZU-23 23 மிமீ பல்கோரியா
ZPU-2 (Type 58) 14.5 மிமீ சீனா
ZPU-1 14.5 மிமீ சீனா
Type 54 12.7 மிமீ சீனா
* இழைப்படகுகள், இழை கண்ணாடிப் படகுகள் ஆகியவற்றில் பல வகைகள் புலிகளினால் உற்பத்தி செய்யப்பட்டன. அவை தாக்குதல் வேகப்படகுகளாகக் காணப்பட்டன.
* பல வகையான கடற்கரும்புலிகளின் தற்கொலைத் தாக்குதல் படகுகள் வடிவமைக்கப்பட்டன.
* அரை-நீர்மூழ்கிக் கலங்கள் பல வகையிலும் அளவிலும் தயாரிக்கப்பட்டன. இவற்றில் பல கடற்கரும்புலிகளினால் பயன்படுத்தப்பட்டன.
* மாற்றத்திற்குள்ளான நீர்மூழ்கி குண்டுகளும் கடலுக்கடி மோட்டார் வண்டிகளும் பயன்படுத்தப்பட்டன.
* இராணுவ தளபாடங்களைக் கொண்டு வரவும், வணிக நடடிவடிக்கைகளுக்காகவும் பல கப்பல்கள் சர்வதேச அளவில் செயற்பட்டன.

பிற சாதனங்கள்

  • குறுகிய, நீண்ட தூர தொலைத் தொடர்புச் சாதனங்கள்
  • குறுகிய, மத்திய எல்லைக்கான தொலைக்கண்டுணர்வி
  • எண்ணிம தொலைகாட்டி / இரவுப் பார்வைச் சாதனம்
  • புவியிடங்காட்டி
  • இராணுவ தேவைக்கான ஒலி, காணொளியுடன் செயற்கைக் கோள் கருவி
  • நச்சு வாயுத் தடுப்பு முகமூடி

உலகில் வேகமான விலங்குகள்

உலகில் வேகமான விலங்குகள் அல்லது உயிரினங்கள் எவை என்பதை சில வகுப்பு பிரிப்புக்களின் அடிப்படையில் நோக்குவது சிறப்பானது. உலகில் வேகமான நிலவாழ் விலங்கு வேங்கை (சிவிங்கிப்புலி) ஆகும். இதன் வேகம் மணிக்கு 109.4–120.7 கி.மீ. (68.0–75.0 மைல்) எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகின் வேகமான பறவையும், விலங்குத் திணையின் (kingdom) வேகமான உயிரினமுமாக பொரி வல்லூறு காணப்படுகின்றது. இது இறையைப் பிடிப்பதற்காக, கீழே வேகமாக இறங்கும் வேகமானது மணிக்கு 389 கி.மீ. (242 மைல்) ஆகும். உலகின் வேகமான கடல் விலங்கு கருப்பு மர்லின் என்ற மீன் ஆகும். இதன் வேகம் மணிக்கு 129 கி.மீ. (80 மைல்) எனப் பதியப்பட்டுள்ளது.

உலகில் வேகமான விலங்கு

உலகில் வேகமான விலங்குகள்

அதிகபட்ச வேகம், விலங்கு வகுப்பு அல்லது வகை என்பவற்றின் அடிப்படையில் உலகில் வேகமான விலங்கு (பறக்கும் வேகம், ஓட்ட வேகம், நீச்சல் வேகம்) பட்டியல் பின்வருமாறு:



விலங்கு வேகம் (கிமீ/மணி) வகுப்பு
பொரி வல்லூறு 389 பறவை
பொன்னாங் கழுகு 320 பறவை
வெள்ளைத் தொண்டை ஊசிவால் உழவாரன் 169 பறவை
ஐரோவாசிய ஹாபி வல்லூறு 160 பறவை
கப்பற்பறவை 153 பறவை
மாடப்புறா 148.9 பறவை
தூண்டு-இறக்கை வாத்து 142 பறவை
கருப்பு மர்லின் 129 மீன்
கிர் வல்லூறு 128 பறவை
சாம்பல் தலை கடற்பறவை 127 பறவை
வேங்கை 120.7 பாலூட்டி
துடுப்பு மீன் 109.19 மீன்
அனா ஓசனிச்சிட்டு 98.27 பறவை
கத்தி மீன் 97 மீன்
முட்கொம்பு மறிமான் 88.5 பாலூட்டி
துள்ளும் மறிமான் 88 பாலூட்டி
நீல எருது மான் 80.5 பாலூட்டி
சிங்கம் 80.5 பாலூட்டி
கலைமான் 80.5 பாலூட்டி

உலகில் வேகமான பறவைகள்

அதிகபட்ச பறக்கும் வேகம் அடிப்படையில் உலகில் வேகமான பறவைகள் பட்டியல் பின்வருமாறு: (தீக்கோழி ஓட்ட வேகத்தின் அடிப்படையில் இங்கு சேர்க்கப்பட்டுள்ளது.)

விலங்கு வேகம் (கிமீ/மணி) வகுப்பு
பொரி வல்லூறு 389 பறவை
பொன்னாங் கழுகு 320 பறவை
வெள்ளைத் தொண்டை ஊசிவால் உழவாரன் 169 பறவை
ஐரோவாசிய ஹாபி வல்லூறு 160 பறவை
கப்பற்பறவை 153 பறவை
மாடப்புறா 148.9 பறவை
தூண்டு-இறக்கை வாத்து 142 பறவை
கருப்பு மர்லின் 129 மீன்
கிர் வல்லூறு 128 பறவை
சாம்பல் தலை கடற்பறவை 127 பறவை
வேங்கை 120.7 பாலூட்டி
துடுப்பு மீன் 109.19 மீன்
அனா ஓசனிச்சிட்டு 98.27 பறவை
கத்தி மீன் 97 மீன்
முட்கொம்பு மறிமான் 88.5 பாலூட்டி
துள்ளும் மறிமான் 88 பாலூட்டி
நீல எருது மான் 80.5 பாலூட்டி
சிங்கம் 80.5 பாலூட்டி
கலைமான் 80.5 பாலூட்டி

உலகில் வேகமான ஊர்வன

அதிகபட்ச வேகம் அடிப்படையில் உலகில் வேகமான  ஊர்வனவற்றின் பட்டியல் பின்வருமாறு:

விலங்கு வேகம் (கிமீ/மணி)
நடுத்தாடி பல்லியோந்தி 40
தோல் முதுகு ஆமை 35.28
பச்சைப் பேரோந்தி 35
கருப்பு மாம்பா பாம்பு 23
கொமோடோ உடும்பு 21

உலகில் வேகமான மீன்கள்

அதிகபட்ச நீச்சல் வேகம் அடிப்படையில் உலகில் வேகமான மீன்களின் பட்டியல் பின்வருமாறு:

விலங்கு வேகம் (கிமீ/மணி)
கருப்பு மர்லின் 129
துடுப்பு மீன் 109.19
கத்தி மீன் 97
மஞ்சள் வால் சூரை 76
குறுந்துடுப்பு சுறா 72

உலகில் வேகமான பாலூட்டிகள்

அதிகபட்ச வேகம் அடிப்படையில் உலகில் வேகமான பாலூட்டிகளின் பட்டியல் பின்வருமாறு: (இதில் மெக்சிக்கோ சுயேச்சை வால் வௌவால் பறத்தல் அடிப்படையிலும், ஓங்கில் நீச்சல் வேகத்தின் அடிப்படையிலும் சேர்க்கப்பட்டுள்ளன.)

விலங்கு வேகம் (கிமீ/மணி)
மெக்சிக்கோ சுயேச்சை வால் வௌவால் 160
வேங்கை 120.7
முட்கொம்பு மறிமான் 88.5
துள்ளும் மறிமான் 88
நீல எருது மான் 80.5
சிங்கம் 80.5
கலைமான் 80.5
முயல் 80
சாம்பல் வேட்டை நாய் 74
கருப்பு வால் குழி முயல் 72
ஆப்பிரிக்க காட்டு நாய் 71
கங்காரு 71
குதிரை 70.76
ஆசியக் காட்டுக் கழுதை 70
தொம்சன் சிறுமான் 70
கயோட்டி கோநாய் 65
ஓங்கில் 65
வரிக்குதிரை 64
புலி 64
கழுதைப்புலி 60
மனிதன் 45
ஆபிரிக்க யானை 24.9